Monday, August 31, 2009

மோதி விளையாடு - Part 2

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு,ஆவடி இந்து கல்லூரியில் போட்டி என்று அறிவிப்பு வெளியான தினத்திலிருந்தே எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.இந்த முறையாவது வெற்றி பெற்றே ஆக‌ வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டு,கணினியிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே" பாட்டை திரும்ப திரும்ப‌ ஒலிக்க விட்டேன். ராஜன் "தான் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து" விலகிக்கொள்வதாகவும்,பீரவீனை புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் வற்புறுத்தினார்.காரணம்,சென்ற வாரங்களில் கிடைத்த கசப்பான தோல்விகள்.பீரவீனும் அரை மனதுடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.தொடர் தோல்விக்குக் காரணம் அணிதலைவர் அல்ல, அணியின் திறமையின்மையே என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.சனிக்கிழமை வலைப்பயிற்சியை சிறப்புடன் மேற்கொள்வதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்று முடிவானது.ஆனால் வலைப்பயிற்சியில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தை எங்களால் உணரமுடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுந்துகொண்டேன்.அறையில் விளக்கை எரியவிட்டுக்கொண்டு மட்டையை எடுத்து பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.அறை நண்பர் எரிச்சல் அடைந்து விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தின் கரங்களில் சிக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார்.நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலாவது எனக்காக அவர் தன் தூக்கத்தை தியாகம் செய்திருப்பார் :).

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6:30 மணிக்கு ஆவடி கிளம்பவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம்.அதன்படி நான் 5:50 மணிக்கெல்லாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்.அன்று முகூர்த தினம் என்பதால் குழந்தைகளும்,பெண்களும் அழகான உடைகளை அணிந்துகொண்டு என்னைவிட உற்சாகமாகவும்,வேகமாகவும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

அணியினர் அனைவரும் திட்டமிட்டபடி 7:30 மணிக்கெல்லாம் இந்து கல்லூரியை அடைந்தோம்.அப்போது வேகமாக வந்து நின்ற வேனில் இருந்து இறங்கிய மற்றொரு அணியினர் அனைவரும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் முறையிலிருந்தே அவர்கள் வலுவான அணி என்று மனதில் முடிவுகட்டிக்கொண்டேன்.அவர்களிடம் சென்று விசாரித்ததிலிருந்து , அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும், எங்களுடன் விளையாட வேண்டிய அணி இன்னும் வரவில்லை என்றும் கூறி, என் நெஞ்சில் பால் வார்த்தனர்.எங்களுடன் விளையாட இருக்கும் அணியினர் இப்போழுது மைதானத்தை அடைந்துவிட்டனர்.அவர்கள் அனைவரும் வேறு வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்றும் தங்களுக்குள் அணி உருவாக்கி விளையாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

டாசில் வெற்றிபெற்ற எதிரணித் தலைவர் எங்களை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இது எங்களுக்கு வருத்தத்தையோ,மகிழச்சியையோ தரவில்லை. காரணம், சென்ற போட்டிகள் அனைத்திலும் முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம், பவுலிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம்.பீரவீனும்,மகேந்திரனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.எதிர்பாராதவிதமாக சந்தித்த பந்துகள் பல நான்காக மாற்றப்பட்டது.அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக வந்துகொண்டிருந்தது.இன்று எப்படியும் ஸ்கோர் 230 க்குமேல் செல்லும் என்று சுரேஷ் கூறிக்கொண்டிருக்கும் போதே பீரவீன் திடீர் என்று பாயின்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு பெவிலியன் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஒன்டவுன் என்ற முக்கியமான இடத்தில் இப்போது ராஜன் களமிறங்கினார்.சொல்லிச்சென்றபடியே அருமையாக விளையாடிக்கொண்டிருந்தார்.சிக்சர் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து பவுன்ட‌ரி லைனில் கேட்ச் பிடிக்கப்பட்டார்.இப்பொழுது எங்கள் அணியின் ஸ்கோர் 92.இன்னும் 17 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் களமிறங்கிய சுனில்,கார்த்திக்,ராஜகோபால் ஆகியோர் ரன் எதும் எடுக்காமலும்,சொற்ப ரன்கள் எடுத்தும் விக்கட்டை இழந்து,இந்திய வீரர்களைப் போன்றே கவலை தோய்ந்த(?) முகத்துடன் பெவிலியன் திரும்பினர்.கார்த்தியின் பொறுப்பற்ற ஆட்டத்தைக் குறை கூறித் திட்டிக்கொண்டே மனதில் குல‌தெய்வத்தை நினைத்துக்கொண்டு , மிகுந்த தைரியத்துடன் களமிறங்கினேன்.

இப்பொழுது நானும் விஜயனும் களத்தில் இருக்கிறோம்.
விஜயனிடம் சென்று எனது பதட்டத்தையும் , இன்னும் 12 ஓவர்கள் இருப்பதையும் கூறினேன்.நிதானமாக ஆடி அனைத்து ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டு , முதல் பந்தை சந்திக்க தயாரானேன்.முதல் பந்தை கண்களை அகல விரித்து, , விழிப்புடன் தடுத்தாட முயன்றேன்.ஸ்டெம்பின் மீதுள்ள காதலால் பந்து பைல்ஷ்யை முத்தமிட்டு சென்றது.மனதில் வெறுப்பு ஊற்றெடுத்து உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.மூன்று மாத வலைப்பயிற்சி,நேரம்,பணம் அனைத்தும் விர‌யமாகிவிட்டது போல் உணர்ந்தேன்.கார்த்திக் என்னை பார்வையால் சூரியனை விட அதிகமாக எரித்துக்கொண்டிருந்தார்.பெவிலியன் திரும்பி சுயநினைவிற்கு வருவதற்குள் எங்கள் அணி அனைத்து விக்கட்டையும் இழந்தது.எதிரணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்தோம்.இதை இலக்கு என்று சொல்வது எனக்கு சற்று மிகையாகவே தோன்றுகிறது.சொற்ப ரன்கள் என்றே வைத்துக்கொள்வோம்.


அணியினர் அனைவரின் மனதிலும் வெற்றிடம் தோன்றி,உற்சாகம் இழந்திருந்தோம். முப்பது ஓவர் வீசி 115 ரன்களுக்குள் எதிரணியினரை சுருட்டுவது என்பது இயலாத காரியம்தானே.
முதல் ஓவரை சந்தோஷ் வீசவேண்டும் என்றும்,இரண்டாவது ஓவரை வீச யாரை அழைக்கலாம் ? என்றும் அணித்தலைவர் எங்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.நான் சுரேஷின் மீது நம்பிக்கை வைத்து, அவரை பரிந்துரைத்தேன்.பீரவீன் அதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது.காரணம் கடந்த நான்கு போட்டிகளின் போதும் சுரேஷ் வீசிய அகலபந்துகளின் எண்ணிக்கை சற்றே அகலம்,சாரி சற்றே அதிகம்.இருந்தும் சுரேஷின் இன் சுவிங் டெலிவரியின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக இரண்டாவது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று முடிவானது.


முதல் ஓவரை இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை அருமையாகத் தொடங்கிவைத்தார்.இப்போது சுரேஷின் ஓவர். தொடர்ந்து நான்கு அகலபந்து மற்றும் நான்கு ரன்களை கொடுத்து ஒரு வழியாக ஓவரை முடித்தார்.பீரவின் மற்றும் ராஜனின் கடுமையான கோபத்தை சம்பாதித்துக் கொடுத்ததுதான் சுரேஷ் செய்த நல்ல காரியம்.இரண்டு ஓவர் முடிந்த நிலையில் எதிர் அணியினர் ஸ்கோர் 15 ஆக இருந்தது.தொடர்ந்து நானும்,கார்த்திக்கும் அருமையாக பந்து வீசி எங்களின் ஸ்பெல்லை நிறைவு செய்திருந்தோம்.தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டிவந்த பெருமை கார்த்திக்கையே சேரும்.
அடுத்து வந்த அப்துல் மற்றும் மகேந்திரன் தங்களது முழுத்திறமையையும் பயன்படுத்தி எதிரணியினரை திணறடித்துக் கொண்டிருந்தனர்.உச்சி வெயில் சூரியன் வேறு தன் கோபக் கண்களால் என்னை திணறடித்துக் கொண்டிருந்தான்.


தண்ணீர் இடைவேளை வந்தபோதுதான் எனக்கு தெரியவந்தது :எதிரணியினர் 52 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர் என்றும்,இன்னும் வெற்றிக்கு தேவையான 64 ரன்களை அடுத்து வரும் 15 ஓவர்களில் எடுக்கவேண்டும் என்றும்.இது எனக்கு சற்றே தெம்பை அளித்தது. காரணம் 15 ஓவர்களில் 64 ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம்.ஆனால் 8 விக்க‌ட்டையும் வீழ்த்துவது என்பது சற்றே முடியக்கூடிய‌ காரியம்.
அணியினர் அனைவரும் ஒன்று கூடினோம்.ஃபீல்டிங் முறையை மாற்றி அமைப்பது என்று முடிவானது.பதினாறாவது ஓவரின் மூண்றாவது பந்தில் சந்தோஷ் ஓரு விக்க‌ட்டை வீழ்த்தி என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தார்.ரன் அவுட் என்ற முறையில் பீரவீன் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினார்.

 இன்னும் 5 விக்க‌ட்டுகளே உள்ளன வெற்றிக்கு.இப்பொழுது களத்தில் இருக்கும் எதிரணி வீரர்கள் ஜோடி சேர்ந்து கணிசமாக ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தனர்.இது சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த ஜோடியை உடைக்கும் பொறுப்பை பீரவீன் என்னிடம் கொடுத்தார்.அந்த ஓவரில் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினேன்.இபோதுதான் பீரவீனின் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் தெளிவாகத் தெரிந்தது.அந்த ரேகைகளில்,வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரிந்து,அணியினர் அனைவரும் வெறியுடன் விளையாடத் தொடங்கினோம்.


தொடர்ந்து வந்த ஓவரை வீசிய கார்த்திக் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தி அசத்தினார்.இப்போது 30 வது ஓவரை வீச மகேந்திரன் அழைக்கப்பட்டார்.ஆறு பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எதிரணி நண்பர்கள் விளையாடத் தயாராயினர். சொற்ப ரன்களாக தெரிந்த ஸ்கோர், இப்பொழுது இலக்காக மாறியிருந்தது என்பது எதிரணி ஆட்டக்காரர்களின் பதட்டத்தின் மூலம் நன்றாக தெரிந்தது.
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களே எடுத்தனர்.மூன்றாவது பந்தை படு நேர்த்தியாக வீசினார் மகேந்திரன்.அது ஆட்டக்காரரை ஏமாற்றி பைல்சை பறித்தது.இதோ நாங்கள் எதிர்பார்திராத வெற்றி எங்களுக்கு சாத்தியமானது.அணியினர் அனைவரும் உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கிறோம்.


தொடர் தோல்விகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி எனக்கு மன நிறைவைத் தந்தது.வெற்றிக்களிப்பில் அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன்.அம்மா "ஊரில் நல்ல மழை பெய்துகொண்டிருப்பதாகவும் ,வெம்மை குறைந்து ஊரே குளிர்ச்சி அடைந்து விட்டதாகவும் " தெரிவித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் ஆடிப் பாடும் சத்தமும் தொலைபேசியின் வழியே கேட்டது.என் மனதிலும் மழை பெய்யாமலேயே,குளிர்ச்சி வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதை எப்படி தெரிவிப்பது என் அம்மாவிடம் ?

Tuesday, August 25, 2009

வீடு

நண்பர் ஒருவருக்கு திருமணம் நிச்ச‌யக்கப்பட்டு இருந்ததால்,திருமண வாழ்வை தொடங்குவதற்காக வாடகை வீடு தேடும்பணியில் ஈடுபட்டிருந்தார். என்னிடமும் அதுபற்றி கூறியிருந்தார். தி‍‍‍‍.நகரில் வீடு வாடகைக்கு இருப்பது பற்றி மற்றொரு நண்பர் மூலம் தெரிந்துகொண்ட நான் , நண்பரை அழைத்துக்கொண்டு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டைப்பார்த்த நண்பர் வீடு பிடிக்கவில்லை என்றும்,வீட்டில் ஒரு மரம் கூட இல்லையென்றும்,மரம் இல்லாத வீட்டில் குடியிருக்க விருப்பம் இல்லை என்றும் கூறினார். இப்போது சென்னையின் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடு தேடிக்கொண்டிருகக்கிறார்.

என் சொந்த‌ ஊரில் எங்க‌ளுக்கென்று சொந்த‌ வீடு ஒன்று உள்ளது. அதில் அம்மா உருவாக்கிய வேம்பு,கொய்யா,தென்னை ம‌ர‌ங்க‌ள் உள்ளன .ம‌ர‌ங்க‌ள் இல்லாத‌ வீட்டில் வாழ்வது குழந்தைகள் இல்லாத வீட்டில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துவது தவிர்க்கமுடியாததுதான். சொந்த வீடு கட்டி குடியேறும் முன்பு நாங்க‌ள் வ‌சித்த‌து ஒரு வாட‌கை வீடு. சிறிய வீடே என்றாலும் மிக‌வும் அழ‌காக இருக்கும். கூரையில் ஓடு வேய‌ப்ப‌ட்டிருக்கும்.வீட்டை ஒட்டி அழகான கிணறும்,கிணற்றடியை ஒட்டி அழகான த‌ண்ணீர் தொட்டியும்,அதையொட்டி துணி துவைக்க ஏதுவாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல் மேடையும் உண்டு. கிணற்றடியை சுற்றிலும் அழகான தென்னை ம‌ர‌ங்க‌ளும்,வேப்ப‌ ம‌ர‌ங்க‌ளும் இருந்தன.

கிணற்றடியில் எப்போதும் அணில்க‌ள் விளையாடிக் கொண்டிருக்கும். வெளியில் சென்று விளையாட‌ அனும‌தி இல்லாத அந்த‌ சிறுவ‌ய‌தில் அணில்க‌ளுட‌ன் பேசி விளையா‌டி இருக்கிறேன். சில நேரங்களில் குரங்குகள் வந்து வீட்டின் மேல் காயவைத்திருக்கும் வடகம்,வத்தல் போன்றவற்றை தின்றுகொண்டிருக்கும். அதை நான் பயம் கலந்த உற்ச்சாகத்துடன் பார்த்திருக்கிறேன். அம்மா அதை ராமா,ராமா போய்விடு என்று வணங்கிகொண்டிருப்பாள். ஒரு நாள் கொக்கு ஒன்று இற‌க்கையில் அடிப‌ட்டு ப‌றக்க முடியாம‌ல் கிணற்றடியை சுற்றி சுற்றி வ‌ந்த‌து. அம்மா மஞ்சள் தடவிய துணியை இறக்கையில் சுற்றி,சில நாட்கள் வைத்தியம் பார்த்தாள். அந்த கொக்கின் நிறம் பார்ப்பதற்கு வெண்சங்கை விடவும் வெண்மையாக‌ இருந்தது. இறக்கையில் இருந்த புண் ஆறிய பிறகு கொக்கை பறக்கவிட அம்மா அனுமதித்தாள். இப்போது அந்த கொக்கு உயிருடன் இருந்தால் அந்த கொக்கின் வயது எவ்வளவு இருக்கும்? கொக்கிற்கு எனது முகமும் , அம்மாவின் முகமும் நினைவில் இருக்குமா? என்று அவ்வப்போது மனம் நினைத்துக்கொள்ளும். இந்த வீட்டில் இருந்த போதுதான் எனது வற்புறுத்தலின் காரணமாக அப்பா புது கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கித் தந்தார். தொலைக்காட்சி வந்த அன்று பகல் முழுவதும் புதை‌ய‌லை காக்கும் பூத‌ம் போல தொலைக்காட்சியின் அருகிலேயே காத்துக்கிட‌ந்தேன். ஒருநாள் மக்கள்தொகை கணக்கெடுக்க வந்த முதல் வகுப்பு பாமா டீச்சரும் எங்கள் வீட்டிற்குள் வந்து காப்பி குடித்துவிட்டு சென்றிருந்தார். மறுநாள் முழுவதும் அதைப் பற்றியே சக மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அது எனக்கு பெருமையாகவும் இருந்தது.

அம்மாவின் சொந்த‌ வீடு கன‌வு கார‌ணமாக‌ ஊரின் ஒதுக்குப்புறத்தில் ம‌னை வாங்கி வீடுக‌ட்டி குடியேறினோம். வீடு மாற்றும் பொழுது கிணற்றடியில் இருந்த‌ ம‌ண்புழு ஒன்றை தீப்பேட்டியில் அடைத்து புதுவீட்டின் தோட்ட‌த்தில் விட்டேன். இருந்தும் என்னுள் அந்த‌ ப‌ழைய‌ வீட்டின் நினைவு மங்காத‌ ஓளியாக‌வே ஓளி வீசிக்கொண்டிருக்கிறது. அந்த‌ வ‌ய‌தில் தோன்றிய‌ எண்ணமெல்லாம் எனக்கு இர‌ண்டு வீடுக‌ள் உள்ளன என்ப‌தே. தேவைப்ப‌டும் பொழுதெல்லாம் ப‌ழைய‌ வீட்டிற்க்கு வ‌ந்து செல்ல‌லாம் என்றே ந‌ம்பினேன்.

பழைய‌ வீட்டின் நினைவு மனதில் எழும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே வீட்டை பார்த்த‌ப‌டியே சென்றிருக்கிறேன். க‌ல்லூரி ப‌டிப்பு நிமித்தமாக‌ வெளியூர் சென்று ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில்,அவ்வ‌ப்பொழுது ஊர் வ‌ரும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியெ ஒரு முறையேனும் சென்றுவ‌ருவேன். பல ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ நிலையில்,பழைய வீட்டின் நினைவு வ‌ந்து வீட்டை பார்க்க‌ சென்றபோது,எங்க‌ள் வீடு இடிக்க‌ப்ட்டு,அது இரு‌ந்த‌ இட‌த்தில் இர‌ண்டு மாடி வீடு க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து. அன்று முழுவ‌தும் ம‌ன‌தில் முள் தைத்த‌து போன்ற உணர்வில் த‌னி அறையில் ப‌டுத்திருந்தேன்.ம‌னதின் வ‌லி மெல்ல க‌ண்ணீராக‌ க‌ரைந்து க‌ண்க‌ளை நிர‌ப்பிக்கொண்டிருந்த‌து. இப்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே செல்வ‌தை த‌விர்த்தே வ‌ருகிறேன்.



Saturday, August 22, 2009

காதல் சிறகுகள்

அவள் மனக் கூட்டில்
இனப் பெருக்கம் செய்தேன்
அழகாய் வளர்ந்தன என் இதய கண்மனிகள்
அள்ளி அணைக்கச் சென்றேன்
சிறகு முளைத்து தாவி பறந்தது
உனக்குள் இருந்தது ஏன் பறந்தது என்றேன்
அது உனக்கு பிறந்ததால் என்றாய்
சோகத்தில் நான்.

நன்றி : பிரவீன் ப்ரசாத்

குறிப்பு : அலுவலக நண்பர் பிரவீன் படைப்புகள் அவர் அனுமதி பெற்றே இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இன்னும் பல அவரின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.

அண்ணன்,பூந்தி,பலூன்

தூக்க‌த்திலிருந்து எழுந்திருத்த‌ போதுதான் அம்மாச்சி வீட்டில் இருப்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வீட்டின் முற்றத்திற்க்கு வ‌ந்தேன். அய்யா காவ‌டியை த‌யார் செய்யும் முய‌ற்ச்சியில் இருந்தார். இன்னும் இர‌ண்டு தின‌ங்க‌ளுக்கு எங்க‌ள் ஊரில் திருவிழா. விழா நிமித்த‌மாக‌ நான்,அம்மா,அண்ணன் முன்தினமே ஊர் வ‌ந்துவிட்டோம். ஊரின் ம‌த்தியில் பேருந்திலிருந்து இறங்கி வ‌ரும்போதே நாட‌க‌ம் ந‌டைபெற இருக்கும் மேடையை தயார்செய்து கொண்டிருப்ப‌தை க‌வ‌ணித்தேன். அய்யா இப்போது ம‌யில்தோகைக‌ளை காவ‌டியின் இருபுறத்திலும் க‌ட்டி,ச‌ர்கரை நிறப்பப்பட்ட‌ செம்புகளைகீழேதொங்க‌விட்டு,ப‌ட்டு துணியை காவ‌டியின் மேற்புறம் ப‌ர‌ப்பி க‌ம்பீர‌மாக‌ த‌யார் செய்து இருந்தார். எங்க‌ள் வீட்டில் இர‌ண்டு காவ‌டிக‌ள் உள்ளன. ஒன்றை இர‌வ‌ல் வா‌ங்க‌ உற்வுக்கார‌ர் வந்திருந்தார். நாளையும்,நாளை ம‌றுதின இர‌வும் நாட‌க‌ம் ந‌டைபெற இருப்பதை அவ‌ர் கூறிக்கொண்டிருந்தார். அப்பொதிருந்தே நாட‌க‌த்தை காணவேண்டும் என்ற ஆவ‌ல் ம‌ன‌தில் முல்லைக் கொடிபோன்று ப‌ட‌ர்ந்து மணம் வீச்க்கொண்டிருந்த‌து.

இன்று ம‌தியான‌ம் பூசை போட‌வேண்டும். பூசை என்ப‌து காவ‌டி க‌ட்டியுள்ள அனைத்து வீடுக‌ளிலும் ந‌ட‌த்தப்ப‌ட‌வேண்டிய‌ ச‌ட‌ங்கு. காவ‌டி முன்பு தேங்காய்,பழம்,பூ வைத்து பூசை செய்து க‌ட‌வுளை வ‌ணங்க வேண்டும். பூசை முடிந்த‌பிறகு வீட்டிலுள்ள அனைவ‌ருக்கும் மற்றும் ஊரில் உள்ள இல்லாத‌வ‌ர்க‌ளுக்கும்,ஏழைக‌ளுக்கும் த‌லைவாழை இலை போட்டு சுவையான‌ உணவு ப‌ரிமாறப்ப‌டும். சில‌ர் வீட்டில் வ‌ந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்க‌ள்.சில‌ர் சாப்பாட்டை கூடையில் வா‌ங்கிச்செல்வார்க‌ள். அம்மாச்சி இல்லையென்று சொல்லாமல் அனைவ‌ருக்கும் உணவு ப‌ரிம‌றுவாள். இது ஒரு ச‌ம‌ப‌ந்தி போஜ‌னத்திற்கு ச‌மமான நிக‌ழ்வு.வீட்டில் உள்ள அனைத்துப் பெண்க‌ளும் பூசைக்கான வேலைக‌ளில் மும்மு‌ர‌மமாக‌ ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌னர். பூசை முடிந்த‌ இர‌வு ஊர்க்காவ‌டிக‌ள் அனைத்தும் குளக்க‌ரையில் உள்ள பிள்ளையா‌ர் கோவிலுக்கு எடுத்துச்சென்று கிட‌த்த‌ப்ப‌டும். இந்த இடத்தில் இருந்துதான் ஊர்காவடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் புற்ப்படும். பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடம் இரண்டு குளங்களுக்கு மத்தி்யில். குளங்களை சுற்றிலும் உயரமான அரசமரங்களும், ஆலமரங்களும் அமைந்திருந்தன. இரு குளங்களிளும் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ஊர் அமைந்திருப்பது அழகான மலை அடிவாரத்தில். இந்த மலை அனுமன் தூக்கிசென்ற சஞ்சீவி மலையிலிருந்து சிதறிய சிறு துண்டு என்று அம்மா கூறியிருக்கிறாள்.

 அதிகாலையிலேயே வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விட்டில் அனைவரும் எழுந்துவிட்டோம். நான் குளித்து முடித்து,காவடி புறப்பாட்டிற்காக காத்து கொண்டிருந்தேன். அம்மா மற்றும் சித்தி அரைமணி நேரமாக அண்ணனை எழுப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அது திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிக்கு சற்று குறைவானது அல்லது அதிகமானது என்றே கூறளாம். அண்ணன் தூங்குவதில் கும்பகர்ணன். கடைசியில் முயற்ச்சி திருவினையாக்கியது. அண்ணன் என்னைவிட மூண்று வயது பெரியவன். இன்று அவன்தான் பிரதான கதாநாயகன். காரணம் காவடியை தூக்கும் வேண்டுதலை அவன்தான் நிறைவேற்றவேண்டும். அன்று அவனை பார்பதற்க்கு பொறமையாக இருந்தது. காரணம் அனைவரின் பாரட்டுதலும்,பாசமும் அவனுக்கே கிடைத்தது . ஊர்காவடிகள் அனைத்தும் புறப்பட்டு மலைப்பாதையை சுற்றிவந்து மலைக்கோவிலை அடைந்தது. மலையை சுற்றிவரும் பக்த்ர்கள் களைப்புதீர ஊர்மக்கள் இலவச மோர்பந்தல்,தண்ணீர்பந்தல் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று அம்மா கூறி்க்கொண்டிருந்தாள். பெரியவனாக வளர்ந்தபிறகு இலவசமாக கலர் வழங்கவேண்டும் என்று அம்மாவிடம் கூறினேன். அம்மா ஆரத்தழுவி முத்தம் கொடுத்தாள். திருவிழா முடிந்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம்.

வரும் வழி நேடுகும் கடையும் கடைதெருவுமாக ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எனது பார்வை பலூன் கடையின் மீதிருந்தது. தேனீக்கள் போல‌ சிறுவர்கள் கடையை மொய்த்துக்கொண்டிருந்தனர். பலூன் வியாபாரி உடல்மெலிந்து,கண்ணம் ஓட்டி இருந்தான். பலூன் ஊதி,ஊதி ஏற்ப்பட்டதால் இருக்கலாம். பலூன் வாங்கவேண்டும் என்ற ஆசையை அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா இரவு நாடகம் பார்க்கப் போகும்போது வாங்கித்தறுவதாக கூறி சாமாதானம் செய்தாள். அம்மாவும் நானும் வீடுவந்து சேர்ந்த சற்று நேரம் கழித்து வந்த அண்ணனை பார்ததும் கோபமும்,அழுகையும் வந்தது. காரணம் அவன் கையில் அழகான சிகப்பு பலூன். விசாரித்தபோது சித்தி வாங்கித்தந்ததாகக் கூறி வெறுப்பேற்றினான். பலூன் இப்போதே வேண்டும் என்று அடம் பிடித்ததால் அய்யா பலூன் வாங்கிக்கொடுத்தார். அது மிகவும் பெரியதாகவும்,வடிவத்தில் சற்று வித்தியாசமாகவும் அண்ணணின் பலூனைவிட அழகாக பச்சை நிறத்தில் இருந்ததில் பெருமை எனக்கு. இரவு உணவு முடிந்ததும் நாடகம் பார்க்க வேண்டுமென்ற ஆசையை சித்தியிடம் தெரிவித்தேன். அவளும் இசைந்தாள். இதற்க்கிடையில் அண்ணணின் பலூன் உடைந்துவிடப்படியால் அவன் கழுகுப்பார்வை என் பலூனின் மீது விழுந்தது. பலூனை உத்திரத்தின் மேல் அய்யா பாதுகாப்பாக கட்டி தொங்கவிட்டிருந்தார். பலூனை பார்த்தபடியே கிழே படுத்திருந்தேன். தூக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தது .மனதில் நாடகம் பார்தே ஆகவேண்டும் என்றஆசை உட‌லெங்கும் பரவிக்கிடந்தது.

 ஈரத்தில் படுத்த்திருப்பது போல் உணர்வு வந்ததால்,கண் விழித்துப்பார்தேன். அண்ணன் படுக்கையில் சீறுநீர் கழித்துவிட்டு அந்த உணர்வே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தெரிந்தது இரவேல்லாம் உற்ங்கிவிட்டு காலையில் கண்விழித்திருக்கிறேன். உத்திரத்தை அண்ணந்து பார்த்தேன்,பலூன் தன் மூச்சை அனைத்தையும் இரவேல்லாம் வெளியேற்றிவிட்டு சிறுத்து மெலிந்திருந்தது,அது பலூன் வியாபாரியை ஒருமுறை நினைவுபடுத்தியது. கோபமாக வந்தது,காரணம் பலூன் அல்ல,நாடகத்தை பார்காமல் தவறவிட்ட ஏமாற்றமே. சித்தியிடம் எழுப்பாததற்கான காரணம் கேட்டபொது,தான் எழுப்பியதாகவும்,சுயநினைவின்றி நான் உறங்கிவிட்டதாகவும் தெரிவித்தாள். இதைக்கேட்டு என்மீதே எனக்கு கோபம் வந்தது. நாடகம் பார்த்த அனுபபத்தை அண்ணன் என்னிடம் சொல்லி, மேலும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டான். தொடர்ச்சியாக வந்த ஒலிபெருக்கி விள்ம்பரம் இன்று இரவும் நாடகம் நடைபெற இருப்பதாகவும்,நாடகத்தின் பெயர் "அரிச்சந்திர மாயன காண்டம்" என்றும் அறிவித்துக்கொண்டிறுந்தது. இது எனக்கு சற்று ஆறுதலை அளித்தது.

அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி அண்ணன் நாடகம் நடைபெறும் மேடையை காண்பிப்பதற்க்காக எனனை அழைத்துச்சென்றான். அம்மா என்னிடம் கொடுத்த ஒரு ரூபாய் பற்றிய செய்தியை அவனிடம் மறைத்துவிடேன். தனியாக பூந்தி வாங்கி சாப்பிடவேண்டும் என்ற ஆசையே அதற்க்குக் காரணம். ஆச்சரியமாக இருந்தது எனக்கு,இது நான் முந்தினம் பார்த நாடக மேடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. நாடக மேடையின் மேற்ப்பரப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் பந்து விளையடும் இரு யானைகளின் உருவமும்,பூச்சொரியும் அழகான மங்கையின் உருவமும் மாறி மாறி வந்து ஆச்சர்யத்தை அளித்தது. மேடையின் உட்புறத்திலிருந்த திரை சேலையில் வண்ணமாளிகையின் படம் வரையப்பட்டிருந்தது. பார்ப்பதர்க்கு அசலான மாளிகையைவிடவும் நேர்த்தியா இருந்தது. நாடக நடிகர்கள் அனைவரும் வந்துவிட்டதாகவும்,அவர்கள் ஊர்த்தலைவர் வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளதாகவும் அண்ணனின் கூட்டாளிகள் கூறிக்கொண்டிருந்தார்கள்.அண்ணன் என்க்கு பூந்தியும்,சீனிச்சேவும் வாங்கிக் கொடுத்தான். பாக்கெட்டை தொட்டுப்பார்தேன்,அம்மா கொடுத்த ரூபாய் பத்திரமாக இருந்தது.அண்ணன் என்க்கு இப்போது ராமனாகக் காட்சி அளித்தான்.

இதோ இப்போது நான்,அம்மா,சித்தி, அனைவரும் நாடகமேடையின் முன் அமர்ந்து இருக்கிறோம்.நாடகம் தொடங்கிவிட்டது.ஆரம்பக் காட்சியில் தோன்றிய கோமாளி சேட்டை செய்து அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தான். திடீர் என்று வந்த புகையில் தோன்றிய நாரத முனிவர்,கம்பீரமான் தோற்றத்தில் இருந்த மன்னன் அரிச்சந்திரன், கொண்ட கொள்கைக்காக நாடிழந்து,மனைவி இழந்து,மகனை இழந்து மாயாணத்தை காத்துக் கொண்டிருந்த காட்சிகள் ஆச்சர்யத்தையும்,அழுகையையும் வரவழைத்தது. விடியற்க்காலை ஆறுமணி வரை நாடகம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.இபோது நான் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறேன்.திருவிழா முடிந்தபடியால் மீண்டும் ஊருக்கு கிளம்பி பேருந்தில் சென்றுகொண்டிருக்கிறோம்.இப்போது எனக்கு அழுகை பீறிட்டுவருகிற‌து,கார‌ண‌ம் ப‌ள்ளி வீட்டுப்பாட‌த்தை முடிக்காம‌ல் விட்ட‌து நினைவுக்கு வ‌ந்த‌து.வாத்தியார் குச்சியுட‌ன் தோன்றி என்னை மிர‌ட்டிக்கொண்டிருந்தார்.

Monday, August 17, 2009

மோதி விளையாடு - Part 1

மிகவும் பிடித்த விசயங்களில் மழையும் ஒன்று. நான் மழையின் ரசிகன்,மழை பெய்ய தொடங்கி விட்டால் உற்சாகமாகி விடுவேன். மழை அல்லாத காலங்களில் அதற்காக ஏங்கி தவித்திருப்பேன். மழைக்கு பிறகு யாருமற்ற சாலையில் சைக்கிள் சவாரி செய்யும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை. பலத்த மழைக்கு பிறகு ஊரை கவ்விகொள்ளும் இருட்டை பார்க்கும் பொழுதில் ஏற்படும் கழிப்பிற்கு அளவே இல்லை.
இப்போதெல்லாம் வார‌ இறுதி நெருங்கிவிட்டால், மழை பெய்யக்கூடாதென்று வேண்டிக்கொள்கிறேன், காரணம் கிரிகெட்.


ஒரு சில வாரங்களாக நான் அலுவலக நண்பர்களுடன் அணிசேர்ந்து வாரவிடுமுறைகளில் வலைப்பயிற்சி மேற்கொள்கிறோம்.
ச‌னிகிழமை அதிகாலை எழுந்து பார்த்த‌போது அதிர்ச்சி என‌க்கு, இர‌வெல்லாம் ந‌ல்ல‌ ம‌ழை பெய்துவிட்டு, இப்போது நிதான‌மாக‌ தூற‌ல் போட்டுகொண்டிருந்த‌து. நினைத்தது போல‌வே வ‌லைப்பயிற்சி ரத்தான செய்தியை நண்பர் சுரேஷின் தொலைபேசி அழைப்பு தெரிவித்த‌து. ஞாயிற்று கிழ‌மையில் போட்டியை வைத்து கொண்டு வலைப்பயிற்சி ர‌த்தான‌து வேத‌னை அளித்த‌து.
ஞாயிற்று கிழ‌மை நண்ப‌க‌ல் ஒரு ம‌ணிக்கு போட்டி ஆர‌ம்பிக்க்க‌ப‌ட‌ வேண்டும். இந்த‌போட்டி நாங்க‌ள் அடைந்த‌ இர‌ண்டு தொட‌ர் தோல்விக‌ளுக்கு அடுத்து ந‌டைபெறும் போட்டி என்ப‌தால் வெற்றிபெற்றாக வேண்டிய‌ க‌ட்டாய‌ம். போட்டி ந‌டைபெறும் இட‌ம் சென்னை துரைபாக்க‌ம் டி.பி. ஜேயின் க‌ல்லூரி.


நான் ம‌ற்றும் அணி ந‌ண்ப‌ர்க‌ள் அரைம‌ணி நேர‌ம் முன்பாக‌வே மைதான‌த்தை அடைந்திருந்தோம். என‌து க‌ல்லூரி ந‌ண்ப‌ர்க‌ளையும் போட்டியை காண‌ அழைத்திருந்தேன். போட்டி குறித்த நேர‌த்தில் ஆர‌ம்ப‌மான‌து. டாசில் வெற்றிபெற்ற எதிர‌ணி த‌லைவ‌ர் பேட்டிங் தேர்வு செய்தார்.இது எங்களுக்கு ப‌ல‌த்த அதிர்ச்சியை த‌ந்த‌து. கார‌ண‌ம் வேறுஎதுவும் இல்லை, விளையாட தேவையான ப‌தினொறு உறுபின‌ர்க‌ளிள் ஒருவ‌ர் ம‌ட்டும் வ‌ரவில்லை. சந்தோஷ், இவர் எங‌க‌ள் அணியின் பிர‌தாண வேக‌பந்து வீச்சாளர். இவ‌ர்தான் போட்டியின் முத‌ல் ஓவ‌ரை வீச‌வேண்டும். அழைபேசியில் தொட‌ர்புகொண்ட‌போது,இப்பொதுதான் சைதாப்பேட்டைதாண்டி வ‌ந்துகொண்டிருப்ப‌தாக‌ கூறினார். வேறு வழியின்றி ப‌த்துபேருட‌ன் போட்டி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது மீண்டும் அதிர்ச்சி கார‌ண‌ம், அணித‌லைவ‌ர் ராஜ‌ன் புதுப‌ந்தை என்னிட‌ம் கொடுத்து முத‌ல் ஓவ‌ரை வீச‌ அழைத்தார். ப‌ந்து குழந்தையின் கண்ண‌ம்ப்போல் ப‌ள‌ப‌ள‌பாக‌ இருந்த‌து. ஒருவ‌ழியாக முதல் ஷ்பெல்லை நன்றாக‌வே வீசி முடித்தேன். இது ஒரு முப்ப‌து ஓவ‌ர் கொண்ட போட்டி. இருப‌த்தி ஆறாவ‌து ஓவ‌ரை நான் விசிய‌ போது, எதிர‌ணி ந‌ண்ப‌ர் தொட‌ர்ந்து மூன்று இமால‌ய சிக்ச‌ர்க‌ளை விளாசினார். முடிவில் இருநூற்று முப்பத்தி மூன்று ஓட்ட‌ங்கள் இல‌க்காக‌ நிர்ணயிக்க‌ப‌ட்ட‌து.

நான் ஒன்றும் சிற‌ந்த ஆட்ட‌கார‌ன் இல்லையென்று தெரிந்திருந்தும்,அணித‌லைவ‌ர் ராஜ‌ன் ஒன்ட‌வுன் செல்லும்ப‌டி த‌ண்ட‌னை கொடுத்தார், காரணம் அந்த இருப‌த்தி ஆறாவ‌து ஓவர். இந்த திடீர் அறிவிப்பால் மனது படபடத்தது. படபடப்பை தணிக்க நண்பர் சாகுலை சிகரெட் பிடிக்க அழைத்தேன். அதற்குள் துவக்க ஆட்டகாரர் விஜயன் ஆட்டம் தொடங்கி இரண்டாவது பந்தில் கிளின் போல்டு. பதட்டத்தை தணிக்காமலேயே களமிறங்க தயாரானேன். பெவிலியனிலிருந்து பிட்சை அடையும்வரை எனகிருந்த படபடப்பை வார்த்தைகளால் கூற முடியாது. தேர்வுமுடிவை அறிவிப்புபலகையில் தேடும்போது மாணவனுக்கு வரும் படபடபுக்கு சமமானது அது. சந்தித்த முதல் பந்தை நான்காக மாற்றினேன். அது அருமையான கவர்டிரைவ் என்றே பார்த்த அனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல, இருட்டில் யாருமற்ற வேளையில் மயானத்தை கடக்கும்போது நமக்குநாமே சத்தமாக பேசிகொண்டோ அல்லது பாடிகொண்டோ செல்வோம் அல்லவா, அதேபோல் கண்ணை இருக்க மூடிகொண்டு வந்ததுவரட்டும் என்று அடித்த ஷாட். அடுத்தடுத்த பந்துகள் வில்லிலிருந்து புறபட்ட அம்பாக கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. வயிற்றில் இப்பொழுது புளியை கறைக்கிறது. ஓவர் வீசிகொண்டிருப்பவர் ஆறடிக்கு மேல் இருகும் ஆஜானுபாகுவான‌ நண்பர். அவர் டெலிவரி அனைத்தும் பெர்ஃபெக்டாகவும் பவுன்சர்களாகவும் வந்தது. அதை நண்பர் பிரவீன் அருமையாக தடுத்தும், அடிதும் ஆடிகொண்டிருந்தார்.

இப்போது எனது ஆட்டம் வந்தது. சந்தித்த முதல் பந்தை மேலே கூறியது போல் விளாசினேன். மைதானத்தில் புழுதி மட்டுமே பறந்தது. பந்து பேல்சை முத்தமிட்டு கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. கிளின் போல்டு. பெவிலியன் திரும்பும்போது அணியினர் முகத்தில் முழிக்க தைரியம் இல்லை. மறைவான இடம் சென்று புகைகாமல் விட்ட சிகரெட்டை இப்போது புகைத்தேன். சிகரெட் ருசிக்கவில்லை. எங்கள் அணி எதிரணி பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் சீட்டுகட்டு சரிவதுபோல் சரிந்து நூற்றி முப்பது ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தோம்.இந்த தோல்வி எங்களுக்கு மூன்றாவது தோல்வி. தோல்வி வெற்றியின் முதல்படி என்பார்கள். இப்போது எங்களிடம் மூன்று படிகட்டுகள் உள்ளன. வெற்றிக்கனி எத்தனை படிகட்டுகளுக்கு அப்பால் உள்ளதென்று தெரியவில்லை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அடுத்த போட்டிக்காக.

ஆட்டம் முடிந்து நானும் நண்பர் கார்த்திக்கும் வீடு செல்லும் வழியில் இப்படி நினைத்துகொண்டேன் : அழைத்த நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர் போட்டியை காண நண்பன் மழையை தவிர அவன் மட்டும் வந்திருந்தால் அந்த மறக்கபடவேண்டிய இருபத்தி ஆறாவது ஓவரை நான் வீசியிருக்கமாட்டேன்.இதோ இன்று திங்கட்கிழ‌மை காலை என் ந‌ண்ப‌ன் ம‌ழை வ‌ந்துவிட்டான். சாலைக‌ளில் உள்ள‌ க‌ழிவுக‌ளையும், குப்பைகளை மட்டும் சுத்தம் செயயவில்லை மழை, சில நேரங்களில் ம‌னித‌ மன‌தில் உள்ள போட்டி, பொறாமை, கோப‌ம் ம‌ற்றும் வேத‌னை போன்ற‌வ‌ற்றையும்தான். ம‌ழைக்கு நான் ர‌சிக‌ன்.

முடிவு

எல்லா பயணமும்
தொடங்கி ‍ முடியும்
என் பயணம்
அவள் முடிவில் தொடங்கியது
காதல் சம்மதம்

இதழ் முத்தம்

வண்டுகளின் நீதிமன்றத்தில்
நான் - முதல் குற்றவாளி
பூ-வில் தேனெடுக்கலாம்

நான் பூத்த இடத்தில்
எடுத்தேனாம்
அவள்-சிரித்ததாள்
'பூன்னகை பூ' பூக்கும்

Friday, August 14, 2009

சுதந்திரப் பயிர்

தண்ணீர்விட் டோவளர்தோம் ? சர்வேசா !
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்

- பாரதியார்


எந்தயும் தாயும்மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இன்னடெ - இதை
வந்தனை கூறிமனதில் இருத்திஎன்
வாயுற வாழ்தேனோ - இதை
' வந்தே மாதரம்,வந்தே மாதரம் '
என்று வணங்கேனோ?

- பாரதியார்