கிராமச்சாவடி

Friday, May 14, 2010

ரசம் போன கண்ணாடி

ஞாயிற்றுக் கிழமை காலை.அய்யனார் அம்மா தேடிக்கொடுத்த பழைய சொக்காயை போட்டுக்கொண்டு தயாராக இருந்தான்.அப்பா சைக்கிளை வீட்டிற்க்கு வெளியே எடுத்து நிறுத்திவிட்டு இவனுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அய்ய‌னார் கேட்டான் " அம்மா கோவிலுக்கு எதுவும் வேண்டுத‌ல் இல்லையா? " அம்மா சொன்னாள் " உன‌க்கு இப்போதைக்கு ஏதுவும் வேண்டுத‌ல் இல்லை,அண்ணனுக்குத்தான் வருகிற‌ ப‌ங்குனி மாத‌ம் வேண்டுத‌ல் இருக்கு. ! "

அம்மா சொன்ன‌ ப‌தில் அவ‌னுக்கு ஏமாற்ற‌ம் அளித்த‌து.அண்ணனைப் போல‌ தன‌க்கும் அடிக்க‌டி உட‌ம்புக்கு வ‌ந்திருந்தால் த‌ன‌க்காக‌வும் அம்மா வேண்டிக்கொண்டிருப்பாள் .தான் ஒரு அபாக்கிய‌சாலி என்று நினைத்துக் கொண்டான்.

அப்பா சத்தம் போட்டார் " இன்னு என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க உள்ள? "
அப்பாவின் குரல் கேட்டதும் குடு குடு என்று வெளியே வந்து சைக்கிளிள் ஏறிக்கொண்டான்.அப்பா அவனின் கால்க‌ள் இர‌ண்டையும் முன்னால் இருக்கும் கம்பியில் பெருக்கல் அடையாளம் போல பின்னி இருக்கும்ப‌டி செய்தார்.அவனின் ப‌ய‌ணம் ஆர‌ம்ப‌மான‌து.அய்ய‌னாருக்கு காலில் போட்டிருக்கும் மிதிய‌டி கிழே நலுவி விழுந்துவிடும் போல் இருந்த‌து.கால் விர‌ல்க‌ளால் அதை இருக்க‌ப் ப‌ற்றிக்கொண்டான்.கைக‌ள் இர‌ண்டையும் சீட்டுட‌ன் இருக்க‌ப் பிடித்திருந்தான்.த‌லையை அப்பாவின் முதுகோடு சாய்த்திருந்தான்.கால்க‌ள் அவ்வ‌‌ப்பொது அவ‌ன் பேச்சை கேட்காமல் தன்னை சுதந்திரப்படுத்திக் கொள்ளும் பொழுதெல்லாம் அதை மீண்டும் பின்னிக்கொண்டான்.இந்த இறுக்கமான‌ ப‌ய‌ணத்திலும் அண்ணனைப் ப‌ற்றி பொறாமை பட தவறவில்லைஅய்ய‌னார்.

அண்ணனுக்கு இன்னும் மூன்று மாதத்திற்க்கு இவன் அனுபவிக்கப்போகும் இந்த அவஷ்த்தை இருக்கப்போவதில்லை.அம்மா அவனுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்துள்ளாரே.அப்பாவும் அய்யனாரும் இப்போது சென்று கொண்டிருப்பது முடி திருத்தகத்திற்க்கு.அது அவர்கள் வீட்டில் இருந்து சற்றே தொலைவில் இருந்தது.

முடி திருத்த‌க‌ம் அமைந்திருக்கும் இட‌ம் க‌ண்மாயை ஒட்டி.க‌ண்மாயின் ப‌க்க‌த்தில் அத‌ன் மேடான பக்கத்தில் ஒரு சாலையும், சாலை முழுவதும் புளிய மரங்களும் இருந்தன.கண்மாயில் பொதுமான அளவு தண்னீர் இருந்தது.அதன் கிழக்கு மூலையில் தாமரைக் கொடி படர்ந்து இருந்தது.

இந்த முடிதிருத்‌தகம் மற்ற முடி திருத்தகத்திலிருந்து சற்று மாறுபட்டது.அதற்க்கு பெயர் பலகை எதும் இல்லை.அங்கு சுழலும் நாற்க்காலி இல்லை.மதிலில் முன்னும் பின்னும் அரையப்பட்ட கண்னாடிகள் இல்லை.புஷ் புஷ் என்று தண்ணீரை பீச்சி அடிக்கும் தண்ணீர் குவளை இல்லை.மனம் பரப்பும் பவுடர்கள் கிடையாது.ச‌வ‌ரம் செய்தபின் போட்டுக்கொள்ளும் குளிர்ந்த திர‌வம் ஏதும் இல்லை.

அங்கு இருந்ததொல்லாம் இரண்டு கத்திரிகளும்,அழுக்கடைந்த சீப்பும்,ஒரு சவரக் கத்தியும்.பாதி உடைந்த ரசம்போன கண்ணாடியிம்.வாய்பிழந்த மண்குடமும்,மூக்கு நெளிந்த கிண்னமும் மட்டுமே . ‌

திருத்தகத்தின் மேல் கூறை பன ஓலையாள் வெயப்பட்டிருந்தது.கடை என்று செல்லும் தகுதிக்காக நான்கு புறமும் இடுப்பு அளவே உள்ள மதில் இருந்தது.அய்யனார் திருத்தகத்திற்க்குள் நுழையும் போதே முடி வெட்டிக்கொள்ள் சிலர் காத்திருந்தனர்.அய்யனார் அமைதியாக சென்று வலதுபுறம் இருந்த குட்டி மதிலில் ஏறி அமர்ந்து கொண்டான்.அப்பா

உள்ளே நுழைந்ததைப் பார்ததும் பேச்சி அவரை வரவேற்று " யாருக்கு வெட்டனு தம்பிக்கா இல்ல உங்களுக்க ? " என்று கேட்டு உறுதிபடித்திக்கொண்டார்.

இந்த கடைக்கு பெயர் ஒன்றும் கிடையாது.அய்யனார் அதை பேச்சி கடை என்றே அறிந்திருந்தான்.பேச்சிதான் அந்த திருத்தகத்தின் உரிமையாளன்.அப்பா மேற்க்கூறை மேல் சோறுகி இருந்த காலாவதி ஆன பத்திரிக்கைகளில் ஒன்றை தேடி எடுத்து இவனுக்கு அருகில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

பேச்சி பார்ப்பதற்க்கு ஒட்டடை குச்சி போல் இருப்பார்.தலை மயிர்கள் எல்லாம் வெள்ளை ஆடை தரித்திருந்தது. கழுத்தில் இருந்த சங்கு புடைத்து அவ்வப் போது மேலும் கிழும் ஏறி இறங்கியது.வலது காதின் மேல் ஒரு பீடி.வாய் நிறைய புகையிலை அதனல் சாமியார் வேடம் அணிந்த பர்க்கள்.மடித்துக் கட்டிய கைலி.முழங்கைக்கு மேலே சுருட்டி விடப்பட்டிருந்த வெள்ளை சொக்காய் என பார்ப்பதற்க்கு வினொதமாய் இருப்பார் பேச்சி.

அய்யனார் அமைதியாக காத்திருப்பது போல தோன்றினாலும்.அவன் மனம் அமைதியற்றே இருந்தது.அதற்க்கு காரணம் பேச்சியிடம் மாட்டிக்கொள்ளப் போகும் அந்த இருபது நிமிடங்கள்.

இப்பொது இவன் முறை வந்தது.அய்யனார் சொக்கயை அப்பாவிடம் கழற்றி கொடுத்துவிட்டு பேச்சியின் முன் சென்று நின்றான்.பேச்சி அவன் தோல்பட்டைய பிடித்து அழுத்தி தன் முன் அமர்த்தினான்.அவனை அப்படி அம‌ர்த்திவிட்டு காதில் இருந்த பீடியை எடுத்து பற்ற வைத்து புகைக்கத்தொடங்கினார்.நான்கு இழுவைகளுக்குப் பிறகு அதை அனைத்து மீண்டும் காதில் எடுத்து வைத்துக்கொண்டார்.

பேச்சி கிண்ணத்திலிருந்து கைநிறைய தண்ணீரை எடுத்து அய்யனாரின் தலையின் எல்லா புறங்களிழும் தெளித்து தடவினார்.அய்யனார் தலையை கவிழ்ந்து தரையப் பர்த்துக்கொண்டிருந்தான்.தண்ணீர் தலையிலிருந்து

இறங்கி மூக்கின் வழியாக வழிந்து நுனியில் சிறிது நேரம் இலைப்பாறி சொட்டிக்கொண்டிருந்தது.சில அதில் பாதை மாறி புருவத்தில் இருந்து இறங்கி தரையில் வந்து விழுந்தது.

பேச்சி இடது கையாள் சீப்பை எடுத்து முடியை அழகாக பிரித்தார்.அப்படி செய்து கொண்டிருக்குப்போதே வலது கையால் பிடித்திருந்த கத்திரியால் கரிச் கரிச் என்று சத்தம் வரும்படி செய்தார்.

இப்போது கரிச் கரிச் சத்தத்துடன் பேச்சி வேலைய ஆரம்பித்திருந்தார்.அய்யனார் காலில் கொத்து கொத்தாக மயிர்கள்
வந்து விழுந்தன.சில அய்யானரின் முகத்தில் வந்து அப்பிக்கொண்டது.அய்யனாருக்கு அதை துடைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது ஆனல் அவனால் அப்படி செய்துகொள்ள முடியாது. பேச்சி " ச்ச் அசையாமல் இரு " என்று சத்தம் போடுவார்.

அவருக்கு யார் பேச்சி என்று பெயர்வைத்தார்கலோ தெரியாது.வேலை செய்யும் போது பக்கத்தில் இருப்பவர்களிடம்
பேசிக் கொண்டே இருப்பார்.அரசியல் பற்றி பேசுவார்.சினிமவை பற்றி பேசுவார்.சென்ற வாரம் ரேஷன் கடைக்கு பாம் ஆயில் வாங்கச் சென்றதைப் பற்றி பேசுவார்.தன் மருமகள் தனுக்கு சோறு போடுவதில்லை என்று தொடங்கி பக்கத்து வீட்டு நாய் இரவு முழுவதும் குரைத்து தூக்கத்தை கெடுத்தது வரை மூச்சு விடாமல் பேச்சிக் கொண்டே இருப்பார்.

பேச்சி மற்றவர்களிடம் பேசுவதையாவது அய்யனாரினல் பொருத்துக்கொள்ள முடிகிறது.சில நேரங்களில் அவர் அய்யனாரிடமும் கேள்விகள் கேட்ப்பார்.அதில் முக்கால் வாசி பள்ளியை பற்றியதாக இருக்கும் அல்லது கணக்கு வாத்தியார் பற்றியதாக இருக்கும்.சில நேரங்களில் மனக்கண்க்கு வேறு கேட்டு அய்யனாரை தினறடித்துவிடுவார்.தலையை கீழே குனிந்து கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது அவனுக்கு
சிரமமாக இருக்கும்.அந்த நிலையில் இருந்து பதில் சொல்லும் போது இவனது குரலை இவனுக்கு கேடகவே வினோதமாக இருக்கும்.

ஒரு வழியாக இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்க்குள் அய்யனார் பல முறை கழுத்தை குனிந்தே வைத்திருப்பான். சில நேரம் கழுத்தை பக்கவாட்டில் சாய்த்தே வைத்திருப்பான்.இரண்டு முறை பூமி போல் தன்னைத் தானே சுற்றி வந்திருப்பான்.

பேச்சியிடம் பிடிக்காதா மற்றொரு விசயமும் அய்யனாரிடம் இருந்தது. அது வேலை முடிந்ததும் தன்னிடம் கேட்க்காமல் அப்பாவிடம் கேட்டு " போதுமா இல்ல இன்னு குறைக்கனுமா " என்று உறுதிப்படுத்திக் கொள்வது.

அப்பா இதற்க்கு எப்போதுமே ஒரே பதிலை மட்டும் சொல்லுவார் " படிக்கிற பையன் தானே இன்னு நல்லா ஒட்ட வெட்டுங்க "

" நல்லா ஒட்ட வெட்டுங்க " இந்த வார்தையை மட்டும் கேட்டுவிட்டால் போதும் பேச்சியின் கத்திரி முன்பைவிட வேகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.மீண்டும் அந்த நீட்டிக்கப்பட போராட்டம் தொடங்கியது.அதே கரிச் கரிச் சத்தம்.அய்யனாரின் பற்க்கள் கூசியது.

வேலை முடிந்ததும் பேச்சி பாதி உடைந்த ரசம் போன கண்ணாடியை எடுத்து அய்யானாரின் முகத்திற்க்கு எதேரே நீட்டினார்.அந்த கண்ணாடி பாதி அய்யனாரின் முகத்தையும் பாதி எதிர் திசையில் இருந்த பேச்சியின் முகத்தையும் அவரது காவி அடைந்த பற்க்களையும் பிரதிபலித்தது.

அப்பாவிடம் சொக்காயை வாங்கி அணிந்துகொண்டான் அய்யனார்.அப்பா பேச்சியிடம் நான்கு ரூபாயை கொடுத்தார்.
பேச்சி கேட்டார் " இன்னு ரெண்டு ரூபா சேத்து கொடுங்க " அப்பா ஒரு ரூபாய் தாளை எடுத்து பேச்சியின் கையில் தினித்தார்.
பேச்சி அவர்கள் வெளிக்கிடும் போது சொன்னார் " கணக்கு வாத்தியார விசாரிச்சேன்னு சொல்லுப்பா "

முடி திருத்தகத்திற்க்கு சென்று விட்டு நேராக வீட்டிற்க்குள் நுழைய அம்மா ஒரு போதும் அனுமதிப்பதில்லை.பின்புற வாசல் வழியாக கிணற்றடிக்கு அவர்கள் சென்றார்கள்.அப்பா கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அண்டாவை நிறைத்தார்.அய்யனாரை அரைக்கால் சட்டையை அவிழ்க்க கூறினார்.என்றாவது ஒரு நாள் இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்வான் அய்யனார்.அம்மா குளிக்க வைக்கும்போது

அவனுக்கு எந்த தயக்கமும் இருப்பதிலை.கால்ச் சட்டையை அவிழ்த்துவிட்டு அப்பாவிடம் அப்படி நிற்ப்பது அவனுக்கு கூச்சமாக இருந்தது.அப்பா அவனை குளிக்க வைத்து அவனது உள்ளங்காலை எடுத்து தேய்க்க ஆரம்பித்தார்.அவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.அதை அப்பாவிடம் இருந்து மறைக்கும் விதமாக பற்க்களை இருக்க கடித்துக்கொண்டான்.இருந்தும் அவனால் முடியவில்லை.

அம்மா அவனுக்கு சுத்தமான கால்ச்சட்டை சொக்காய் அணிவித்து நேற்றி நிறைய திருநீர் பட்டை போட்டுவிட்டு. சுடச் சுட நடுவில் குழிபரித்து நல்லென்னெய் விட்டு அதில் வெள்ளக் கட்டி ஒன்று பதித்த வெந்தயக்களி தட்டை கொடுத்தாள்.

அவன் அதை இருவிரல்களாலும் நக்கி சுவைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எங்கிருந்தோ வந்த அண்ணன் " என்ன டா கரச்சா மண்ட. எந்த கரையான் புத்துக்குள்ள தலையவிட்ட ? " என்று சொல்லி தலையில் ஒரு தட்டு தட்டினான் .சாப்பிட்டுக்கொண்டிருந்த களி மூக்கில் சென்று இழுகியது.அய்ய‌னாருக்கு கோப‌ம் பொத்துக்கொண்டுவ‌ந்த‌து

கண்கள் சிவக்க வீட்டில் இருந்த நிலைக் கண்ணாடியை நோக்கி ஓடினான்.தலையை முன்னும் பின்னும் அப்படியும் இப்டியும் அசைத்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.அண்ணன் சொன்னது உண்மை போல் பட்டது அவனுக்கு.கோபம் கண்ணீராக மாறி அழுகையாக கரைந்தது.அவன் அழுததை கண்ணாடி அப்படியே பிரதிபலித்தது.அது பார்ப்பதற்க்கு ரசம் போன பேச்சியின் கண்ணாடியில் பார்த்த முகத்தை விடவும் அசிங்கமாக இருந்தது.



குறிப்பு :
========

[  பதின் வயது நினைவுகளை பற்றி எழுத வேண்டும் என்று
  கமலேஷ் கேட்டுக்கொண்டார். எனக்கு எழுத வேண்டும் என்று தொடங்கியதும் இதுதான் வந்து விழுந்தது.இது பதின் வயது நினைவுகளில் வருமா என்று தெரியாது.பதின் வயது நினைவுகளில் காதல் பற்றி இருக்க வேண்டும் என்று நண்பர்கள் கூறினார்கள்.எனக்கு சின்ன வயதில் ஏற்ப்பட்ட அனுபவத்தை ஒரு கதை போல் சொல்ல முயற்ச்சித்துள்ளேன்.பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். ]

Wednesday, April 14, 2010

வாழ்க்கை எனப்படுவது யாதெனின்

எதோ சத்தம் சமயலறையிலிருந்து வந்தது. தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்துகொண்டான் சாமிநாதன். தூக்க க‌லக்கத்திலேயே சமயலறையை நோக்கி சென்றான். எப்போதும் போல் அம்மாவும் அப்பாவும் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் அதை கவனித்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாதவன் போல் கிணற்றடிக்கு சென்றுவிட்டான். காலை கடன்களை முடித்துவிட்டு வரும்வரை சண்டை தொடர்ந்தது. சாமிநாதனின் தங்கை   இருவரையும் பார்த்து மிரண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளை சாமதானப்படுத்தி மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். சண்டை முடிந்தபாடில்லை. இன்னும் சத்தம் வந்துகொண்டுதான் இருக்கிறது. தங்கைக்கு போக்கு காட்டி அவளது சிந்தனையா மாற்ற முயற்ச்சித்த போதும் அவனது கவனம் எல்லாம் வீட்டின் சமயலறையிலிருந்து வரும் சம்மாசனையில் தான் இருந்தது. சண்டைக்கான காரணம் இப்போது அவனுக்கு புரிந்துவிட்டது. அப்பா அவரது தங்கைக்கு பண உதவி செய்திருக்கிறார். அத்தை வீட்டல் பெண் சடங்காகி விட்டாளாம்  விசேசத்திற்க்காக பணம் கொடுத்துள்ளார். அதுவும் மூன்று வட்டிக்கு வாங்கி. அம்மாவின் வாதமெல்லாம் தன்னிடம் கூறாமல் அதை ஏன் ? செய்ய வேண்டும் என்பதே. அம்மா எப்படியோ அதை மொப்பம் பிடித்துவிட்டாள். அதுவும் குடும்பம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் கடன் வாங்கி உதவுவது என்பது சற்று அதிகமாக அவளுக்கு பட்டிருக்கவேண்டும்.விரலுக்கேத்தா வீக்கம் வேண்டும் என்பதே அவளது வாதம். அப்பாவிற்க்கு த‌னுக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது மற்ந்துவிட்டதாம் !.


அப்பா ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை. தன்னோடு கூட பிறந்த பிறப்பிர்க்கு உதவியுள்ளார் அவ்வளவே. அதை அம்மாவிடம் தெரிவித்து விட்டு செய்திருந்தாள் அம்மா சற்று சமாதானம் அடைந்திருப்பாள். அப்பா ஏன் ? இதை தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் கடன் வாங்கி உதவும் அளவுக்கு அப்பா செல்லவதை தடுத்திருப்பாளோ?. சாமிநாதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.அவனுக்கு இரண்டு பேரின் மீதும் கோபம் வந்தது . சிறுவனாக இருக்கும் போது அவனது தங்கையைப்  போலத்தான் இவனும் இருவரின் சண்டையைப் பார்த்து மிரண்டு அழுதுவிடுவான். இப்பொதெல்லாம் அவன் இருவருக்கும் இடையே சமாதானம்  செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டான். அவர்களுக்கு வாழ்க்கையை வாழத்தெரியவில்லையாம். அதை எப்படியும் அவர்களுக்கு புரியவைத்துவிடவேண்டும் என்று சில நேரங்களில் அதற்க்கான முயற்ச்சிகளில் அவன் இறங்வதும் உண்டு. இப்படி நடக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பதும். சில நாடகளில் மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் பேசிக்கொள்வதும் வலக்கம். அது அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. மனதிற்க்குள் ஒரு முடிவு கட்டிக்கொண்டான் . கல்யாணத்திற்க்கு பிறகு .தான் ஒரு போதும் இது போன்ற சண்டைகளில்  மனைவியோடு ஈடுபடக்கூடாது என்பது அது..அவனுக்கு கல்யாண வயது வந்துவிடவில்லை. இருந்தாலும் அப்படி நினைத்துக்கொண்டான் .தனது வாழ்க்கையப் பற்றிய ஆசை அது. வாழ்க்கயை அப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கனவு கண்டான்.நல்ல வளமான  சிந்தனைதான்.


அம்மா பக்காத்திவிட்டு சாரதா அக்காள் மகனைப் பற்றி அப்பாவிடம் குறைபட்டுக்கொண்டிருந்தாள். படித்து முடித்து மூன்று வருடம் ஆகியும் வேலைக்கு செல்ல வில்லையாம். அப்படி எதாவது வேலைகிடைத்தாலும் இரண்டு மாதத்திற்கு மேல் ஒரு இடத்திலும் தங்குவது இல்லையாம். சில இரவுகலில் சாரயம் குடித்துவிட்டு வந்து சண்டையிடுகிறானாம். நேற்றுகூட எதோ சண்டையில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டானாம். சறியான நேரத்திதில் பார்த்த‌தாள் கப்பாற்றிவிட்டார்களாம். பாவம் சரதா அக்காள் .கணவனை இழந்தவள். எதொ அவளது தம்பியின் உதவியுடன் கிடைத்த வருமானத்தை வைத்து அவனை படிக்க வைத்தாள். அவனும் நன்றாகத்தான் படித்து முடித்தான் . நல்ல திறமை சாலிதான். எதோ சில காலமாக இப்படி செய்து கொண்டிருக்கிறான்.  இரண்டு வருடம் முன்பு கூட அவனுடன் படித்த அக்காள் ஒருத்திக்கு காதல் கடிதம் கொடுத்து பிரச்சனையாகி அவளது அப்பா வந்து சத்தம் போட்டுவிட்டு சென்றார். சரதா அக்காள் கூனி குறுகிவிட்டாள். அவளின் நிலை பரிதாபத்திற்க்குரியது. அவளது மகனை நினைத்து எரிச்சல் அடைந்துகொண்டான். தான் ஒரு போதும் இப்படிபட்ட சிரமத்தை  வீட்டிற்க்கு கொடுத்துவிடக்கூடது என்று முடிவு கட்டிக்கொண்டான் சாமிநாதன். அவனுக்கு கிடைத்த‌ உயர்ந்த கல்வி அவனை அப்படி சிந்திக்க வைத்த‌து.

சாமிநாதனின் அப்பா உடல் நலம் சரியில்லாமல் ஒரு நாள் படுத்துக்கொண்டார். மருத்துவ பரிசோதனையின் முடிவு அவருக்கு சக்கரையின் அளவும் கொழுப்பின் அளவும்  சராசரிக்கு சற்று அதிகமாகவே இருப்ப‌தாக தெரிவித்தது.   அன்று முதல் வீட்டில் இனிப்பு வகைக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அம்மா பக்குவம் பார்க் ஆரம்பித்தால். அப்பா தினசரி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிற்க்கு கூட சில காலமாக மூட்டுவலி பிரச்சனை தொடங்கி விட்டது. சென்றமாதம்கூட கிட்டப்பார்வை காரணமாக அவள் மூக்கு கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்தாள். வீட்டில் இப்பொதொல்லாம் நேய்களை பற்றியே பேச்சுக்கள் அதிகமாக இருந்தன. இவைகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு ஒருபோதும் இது பொன்ற பிரச்சனைகள் வ்ரப்போவதில்லை. அவன் தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறான். நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறான். தன்னைப் போல் தனது வீட்டாறால் ஏன்  செயல்பட முடியவில்லை ? என்ற கேள்விகளை தனக்குள் எழுப்பிக்கொண்டான்.  இளைமை துடிப்பு அவனை அப்படி சிந்திக்க வைத்தது.

அப்பாவின் நண்பர் ஒருவர் எதோ அவசரத் தேவைக்காக கைமாத்து கேட்க வந்திருந்தார். அப்பா தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை இல்லை யேன்றும் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாகம் கூறி அனுப்பிவிட்டார். ஆனால் சாமிநாதனுக்குத்தான் தெரியும் அப்பா சீட்டு பிடித்த பணத்தை நேற்றுதான் அம்மாவிடம் கொடுத்து பத்திரப்படுத்தினார். ஒரு வேலை அப்பாவிற்க்கு தனக்கும் ஒரு பெண் இருப்பது இப்போது நினைவிற்க்கு வந்துவிட்டதோ ?. எப்படியிருந்தும் தங்கைக்கு நாளைக்கே கல்யாணம் நடந்துவிடப் போவதில்லை.தேவைக்கு கொடுத்தால் அவர் திருப்பி கொடுத்துவிடப் போகிறார். அப்பாவின் நடவடிக்கை அவனுக்கு வேதனை அளித்தது.

சாமிநாதனுக்கு சென்னை சென்று கல்லூரியில்  சேர்ந்து படிக்கவேண்டும் என்பது ஆசை.ஆனால் அப்பா விடுதிக்கட்டணம் மற்றும்  இதர போக்குவரத்து செலவு அனைத்தையும் நினைத்து அவனை உள்ளூர் கல்லூரியிலேயே சேர்ந்து படிக்கவைத்துவிட்டார். ஏமாற்றம் அடைந்துவிட்டான். தனக்கு ஒரு குழந்தை இருக்கும் போது அவனுக்கு தேவையானதை கண்டிப்பாக செய்து கொடுப்பான் சாமிநாதன். ஏமற்றத்தின் வலி அவனுக்கு தெரியும் அல்லவா.

வாடகை வீட்டில் வசிப்பது போன்ற கொடுமையை அவன் வேறு எந்த விசயத்திலும் அனுபவித்ததில்லை. ஒரு நாள் வீட்டு உரிமையாளர் உடனே காலி செய்யுமாறு வற்ப்புறுத்த தொடங்கி விட்டார். அப்பாவிற்க்கு வேறு வழி தெரியவில்லை. வீட்டு சாமன்களை நண்பர் ஒருவரது வீட்டில் வைத்து விட்டு  குடும்பத்தை ஒரு வாரம் வெளியூரில் உள்ள தாத்த வீட்டல் தங்கவைத்திருந்தார். அந்த வாரம் முழுவதும் சாமிநாதனும் ,அவன் தங்கையும் பள்ளி செல்லவில்லை. சாமிநாதன் அப்பா ஏன் ? இன்னும் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவில்லை என்று நினைத்துக்கொண்டான். அப்பாவின் செயல் அவனுக்கு வேதனை அளித்தது. தான் ஒரு போதும் இப்படி இருந்து விடக்கூடாது என்று முடிவு கட்டிக்கொண்டான்.

பெரியப்பா வின் மகன் திருமணம் நிமித்தமாக சாமிநாதன் குடும்பம் கல்யாணத்திற்கு சென்றுறிந்தது. கல்யாண பெண்னை பார்த்ததும் சாமிநாதனுக்கு ஒரே அதிர்ச்சி.அண்ணன் நல்ல அரசாங்க பதவியில் உள்ளவன். அவன் எப்படி இந்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதித்தான். மணப்பெண் சற்று உயரம் குறைவாக  பருத்து பற்க்கள் அனைத்தும் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும்படி இருந்தாள்.தனக்கு வரப்போகும் மனைவி ஒரு போதும் அப்படி இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் அவன்.

இன்றுடன் சாமிநாதனுக்கு எழுபத்தி நான்கு வயது முடிவடைந்துவிட்டது. அவன் இப்போது இருப்பது அவன் சொந்தவீட்டில்தான். அது அவன் வியாபாரத்தில் நண்பணிடம் பொய் கணக்கு காட்டி சம்பாத்த்தி கட்டியது. நண்பன் நட்ட‌ப்பட்டு இப்போது எங்கோ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான்.சாமிநாதனுக்கு இரண்டு மகன்கள். இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. என்ன ஒருவன் தான் இப்பொது சாமிநாதனுடன் இருக்கிறான். இன்னோருவன் காதல் திருமணம் செய்து கொண்டு கல்க்கத்தாவில் வசிக்கிறான். போக்குவரத்து எதுவும் சமிநாதனுக்கும் அவனுக்கும் கிடையாது .தன்னை எதிர்த்து அவன் காதல் திருமணம் செய்துகொண்டது சாமிநாதனுக்கு பிடிக்கவில்லை. ஒதிக்கி வைத்துவிட்டான். சாமிநாதனின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டாள். அவள் அப்படடி ஒன்றும் அழகானவள் இல்லை.கழுத்து நீண்டு குச்சி போல் இருப்பாள். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறைவே. இருவருக்குமிடையே ஒத்துவரவில்லை..சின்ன சின்ன‌ விசயங்களில் எல்லாம் சண்டைதான். இன்னும் சொல்லப் போனல் அவர்கள் இருவரும் கடைசி எட்டு வருடங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. சாமிநாதனுக்கு நாற்ப்பது வயதிலேயே வழுக்கை விழுந்துவிட்டது .பற்க்கள் எல்லாம் சொத்தையாகிவிடடது. தொப்பையை குறைப்பதற்க்காக முன்பு தினமும் ஒடிக்கொண்டிருந்தான். அது எந்த பலனையும் அவனுக்கு தரவில்லை. அவன் படித்து முடித்ததும் அவனுக்கு உடனே வேலையும் கிடைத்துவிடவில்லை.இரண்டு வருடங்கள் ஊர் சுற்றிக்கொண்டுருந்தான். அந்த நேரத்தில் தான் அவனுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. தினம் தினம் அமாவுடன் சண்டைதான்.ஒருநாள் வீட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். அவனது குடிப்பழக்கம் அவ‌னுக்கு குழந்தை பிறக்கும் வரை  அவனுடன் இருந்தது.

அவனது வீடு இரண்டு மாடிவீடு.அவன் இப்போது வசிப்பதோ வீட்டில் மறைவாக இருக்கும் ஒரு சிறிய அறையில்.
 தனக்கு இன்று பிறந்தநாள் என்று அவனுக்கு  ஞபாகம் இல்லை. அவன் முகத்தில் வெயில் சன்னலின் வழியாக சுளிர் என்று அடிக்கிறது. யாரவது வந்து திரைச் சோலையை சரி செய்துவிட்டால் தேவலை என்று தோன்றிகிறது. எப்போது அவனுக்கு பக்கவாதம் வந்ததோ அப்போதிலிருந்து அனைத்து தேவைகளுக்காகவும் அவன் மற்றவர்களைத்தான் நம்மி இருக்கவேண்டியிருக்கிறது. அவன் குளித்து நான்கு நாட்கள் அகிவிட்டது.உடல் எல்லாம் பிசு பிசுக்கிறது. உடையிலிருந்து முடை நாற்றம் வர ஆரம்பித்துவிட்டது. பூமாக் குட்டிதான் முன்பெல்லாம் அவனை சுத்தம் செய்யும் பணியை செய்துவந்தாள். பூமா என்பது அவனுடைய பேத்தி. சாமிநாதன் அவளை பூமாக் குட்டி என்றுதான் செல்லாமாக அழைப்பான். நான்கு நாட்களாக அவளையும் காணவில்லை. அவன் கண்கள் அவளைத் தேடியது. வாய்விட்டு கூப்பிடலாம் என்றால் வாய் அதற்க்கு ஒத்துலைக்கவில்லை. எப்படியும் பூமாக் குட்டி சாயங்காலம் வந்துவிடுவாள் ! என்ற நப்பிக்கையில் காத்திருக்க தொடங்கினான். ஆனால் அவனுக்கு தெரியாது  பூமா காலையில் '  கிழம் சாகம நம்ம உயிர வாங்குது  ' என்று சொல்லிவிட்டுச் சென்றது.

Tuesday, February 9, 2010

மருதுவும் கலையரசியும்

' இன்னு ஒரு வருசத்துல எனக்கும் படிப்பு முடியிது.இப்பவே அப்பா கல்யாணத் தரகருகிட்ட சொல்லி வச்சுட்டாரு.இன்னும் ஒரு வருசமோ இல்ல ஆறு மாசமோ அதுக்குள்ள பேச்சு இன்னு தீவிரமாயிரு.நீயு ஒன்னோட முடிவ மாத்திக்கிறது மாதிரி தெரியல.படிப்புக்கு அப்புறம் அப்பாவ என்னால சமாளிக்க முடியாது.நீ குமாரண்னே கிட்ட பேசுனிங்களா இல்லையா?' கேள்வி எழுப்பினாள் கலைஅ‌ரசி.மௌனம் காத்தான் மருது.

'நீங்க  இப்படியே இருந்தா வேற எவனவது கல்யாணங் கட்டிக்கிட வருவாக, நானு அவுக பின்னாடி பல்ல யிளிச்சுக்கிட்டுப் போயிருவே அப்படின்னு மட்டு நெனைக்காதிங்க ......'  கண்கசக்கினாள் கலைஅரசி.

'சும்மா எதாவது கற்பன பண்ணிப் பேசத கலை.  டவுனுல போயி எவனுக்கு கீழயாவது கை கட்டிக்கிட்டு  வேலை செய்ய என்னால முடியாது.எந்த வேல செஞ்சாலும் இந்த கிராமத்துலதான்னு முடிவு பண்ணிட்டேன்..எப்படியும் அடுத்த மாசத்துல குமாரு அண்ணே பணம் ஏற்பாடு பண்ணித் தந்துருவாரு.பெறகு அப்பா கிட்ட என்னோட முடிவ சொல்லிருவேன்' ஆறுதல் கூறினான் மருது.

அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தது ஒரு கரிசல் காடு.வாரம் ஒருமுறையேனும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இப்படி சந்தித்துக்கொள்வது வாடிக்கை.கலையரசி பெயருக்கேத்த மாதிறி  அழகானவள். கருப்பு நிறம் தான்.நிறமா அழகை முடிவு செய்கிறது?.மிகுந்த புத்திசாலி,அனுசரணையானவள்.யாருக்கும் தீங்கு இழைக்காதவள்.இவர்கள் ஆசைப்படுவது ஒருவருக்கும் தெரியாது.மருதுவின் அம்மாவிற்கு மட்டும் அரசல் புரசலாக தெரியும்.

மருது ஒன்றும் இந்த உலகில்,எந்த இளைஞனுக்கும் குறைந்தவன் அல்ல. மிகுந்த அறிவாளன்.நல்ல தேக ஆரோக்கியம்.முதுகலை பட்டதாரி.படிப்பு முடிந்தவுடனேயே நல்ல கம்பெனிகளில் அவனுக்கு வேலை கிடைத்தது.அதை அனைத்தையும் உதறிவிட்டு அவன் காத்திருப்பது ஒரு இலட்சியத்திற்காக.அவன் மனதிற்குள் அயிரம் ஆசைகள்.மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.எதன் பின்னாடியோ தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உலகை தடுத்து நிறுத்த வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும்.அதற்காக அவன் சற்று காத்திருந்துதான் ஆகவேண்டும்.கலையரசியும் அதற்கு உறுதுணையாய் இருப்பாள்.

கலையரசி மருதுவின் மாமன் மகள் தான்,இருந்தும் வேலை இல்லாத ஒருவனுக்கு பெண் கொடுக்க கலையரசியின் அப்பா ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.எப்போது இவர்கள் காதல் வயப்பட்டார்கள் என்பது இவர்கள் இருவருக்கும் தெரியாது.இதுவரை இவர்கள் காதலை பரிமாறிக் கொண்டதுமில்லை.வித்திலிருந்து வளரும் மரம் போல அவர்களுக்குள் காதல் தானாகவே வளர ஆரம்பித்தது.

சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடியவர்கள்.மருது கலையரசிக்கு மூன்று வயது மூத்தவன்.ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்பில் படித்தவர்கள்.கலையரசி பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மருது வீட்டில்தான் இருப்பாள்.மாலை நேரங்களில் மருதுவின்  பொழுதுபோக்கு,தோட்ட வேலைகள் செய்வது.வீட்டின் கொல்லையில் அழகான தோட்டம் தயார் செய்திருந்தான்.அந்த தோட்டத்தின் வளர்ச்சியில் கலையரசியின் பங்கும் இருந்தது. வீட்டின் தேவைக்கு அந்த தோட்டத்திலிருந்தேதான் காய்கறிகள் பறிக்கப்படும்.அவர்கள் நட்பின் சான்றாக அவர்கள் உருவாக்கிய மாமரம் இன்றும் வருடம் தவறாமல் காய்த்துக்கொண்டிருக்கிறது.

மருதுவின்  வீட்டில் கால்நடைகளுக்குப் பஞ்சமில்லை.ஆடுகளைப் பட்டியில் அடைப்பது,மாடுகளுக்கு கழனி காட்டுவது,கோழிகளை பஞ்சாரத்தில் அடைப்பது போன்ற அனைத்து வேலைகளிலும் அத்தைக்கு உதவினாள் கலையரசி.

பள்ளிப் பிராயத்தில் மருது ஆடு ஒன்றை வளர்த்து வந்தான்.அதன் பெயர் கருப்பன் .ஒரு நாள் அம்மை நோய் கண்டு கருப்பன் இறந்துவிட்டான்.கலையரசி அழுது புறண்டுவிட்டாள்.கருப்பனை வீட்டின் பின்புறத்தில் புதைத்து அதன் மீது மருதாணிச் செடி ஒன்றை நட்டுவைத்தான் மருது.அதை தண்ணீர் விட்டு வளர்த்தாள் கலையரசி.இப்போதும் கலையரசியின் கைகள் சிவக்கும் போது அவர்கள் கருப்பனை நினைக்கத் தவறுவதில்லை.

மருதுவின் குடும்பம் ஒரு சம்சாரி குடும்பம்.அப்பா மாயண்டி அம்மா நாச்சியார்,தங்கை வள்ளி என அளவான குடும்பம்.மாயண்டிக்கு தொழில் வெள்ளாமை.அவருக்கென சொந்த நிலங்கள் இருந்தன.அதில் வெள்ளாமை செய்து வரும் வருமானத்தில் தான் மருதுவை படிக்கப் வைத்தார்.வள்ளியை நல்ல இடத்தில் கல்யாணமும் முடித்து வைத்தார். இரண்டு ஆண்டுகளாக வானம் பார்த்த பூமி ஆகிவிட்டது.வெள்ளாமை இல்லை.வெள்ளாமைக்கு வாங்கிய கடனும் அடைத்தபாடில்லை.வயதும் ஆகிவிட்டது மாயாண்டிக்கு.மருதுவை நம்பியிருந்தது குடும்பம்.

'கொஞ்சப் பணம் குமார் அண்ணே கிட்ட வாங்கியிருக்கே.அத வச்சு  மேற்கால நம்ம எடத்துல கெணறு ஒன்னு தோண்டி கிடப்புல கெடக்குற வெள்ளாமைய தொடங்கலான்னு இருக்கே'  மாயாண்டியிடம் கூறினான் மருது.

' நாந்தே கடைசி வரைக்கும் இந்த செம்மண்னுல பொறண்டு பொழப்பு நடத்துனேன்னு பாத்தா நீயு ஆரம்புச்சுட்டியா.இந்த மண்ணோட ராசியப்படி. யாரையும் விடாது . ம்ம்.. விருப்பம் போல செய்யி '   அரைமனதுடன் சம்மதித்தார் மாயாண்டி

மாயாண்டி மருதுவிடம் சலிப்பாகக் கூறினாலும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தார்.தன்னோட இந்த நிலம் தருசாகிவிடும் என்ற நினைப்பில் இருந்த மாயாண்டிக்கு இது பெரிய ஆறுதல் அளித்தது.தன் தாத்தன் முப்பாட்டன் எல்லாருக்குச் சோறு போட்ட நிலம் தன் மகனை மட்டும் அம்போனு விட்டுறுமா என்ன?என்று நம்பினார் மாயாண்டி.

' நேத்து வேளான்மை கழக ஆசிரியரை கூட்டியாந்து காட்டுனேன் அவரு இந்த எடத்துல நல்ல நீரோட்டம் இருக்குறதா சொன்னாரு.நாளைக்கு நல்ல நாள்.பூசைய  போட்டு வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். கெணறு வெட்றதுக்கு ஆளுங்கள வரச்சொல்லி இருக்கேன்' குமார் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தான் மருது.

இருவரும்  நின்று பேசிக்கொண்டிருந்த இடம் வயக்காட்டின் மேற்குப்புறம்.குமார் பள்ளி ஆசிரியர்.வருங்கால உலகத்தை செம்மைப்படுத்த இளைஞர்களால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அதற்கான சில வேலைகளையும் செய்துவந்தான்.

மதுரை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் குமாருக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் இருந்தார்.அவர் மூலம் மாதம் ஒருமுறை வேளாண்மைப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தான் குமார்.அதில் பங்குகொள்ள மருதும்,இன்னும் சில சுற்றுவட்டார இளைஞர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

'இந்த மண் மாதிரியே வேளாண்மை ஆரய்ச்சி கழகத்தில கொடுத்துருங்கண்ணே.சோதனை முடிவை நாளைக்கு போயி நா வாங்கிக்கிறே' சுருக்கு பையில் ஒரு பிடி வயல் மண்ணை குமாரிடம் எடுத்துக் கொடுத்து கூறினான் மருது.

கரிசல் காடு  :

' நம்ம நெனச்ச அளவுக்கு நிலத்தடி நீர் இல்ல. கெணத்து தண்ணிய மட்டும் நம்பியிருக்க முடியாது.எப்படியு கொஞ்ச நாளைக்கு பெறகு  மழையத்தான் நம்பி ஆகணும்' வருத்தப்பட்டான் மருது.

' கவலப்படாத எப்படியும் இந்த வருசம் நல்ல மழ பெய்யும். அய்யனாருக்கு நேந்து இருக்கே அந்த சாமி நம்ம கைவிடாது.ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது ' ஆறுதல் கூறினாள் கலையரசி

காதலியின் வார்தைகள் நம்பிக்கை ஊட்டின அவனுக்கு.

இயற்கையின் மீது பாரத்தை போட்டு வேலையை ஆரம்பித்தான் மருது.மாயாண்டியும் நம்பிக்கை கொடுத்தார்.அவரின் பழுத்த அனுபவம் கண்டிப்பாக மருதுவிற்கு கைகொடுக்கும்.எங்கே பழமையும் புதுமையும் கைகோர்க்கிறதோ அந்த இடத்தில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தானே?

மருதுவும் மாயாண்டியும் வயலை உழுவதற்கான பணியில் இறங்கினர்.அப்போது அவர்கள் ஒரு முடிவு கட்டிக்கொண்டனர் அது' இயற்கை உரங்களைத் தவிர மற்ற எதையும் பயன்படுத்தக்கூடாது'என்பது.

வயலின் ஒருபுறத்தில் பாத்திகட்டி,வேளாண் கழகத்திலுருந்து வாங்கி வந்த விதை நெல்லைத் தூவி நாத்துகள் வளர ஏற்பாடு செய்திருந்தான் மருது.ஒரு வாரத்தில் நனறாக நாத்து பிடித்துவிட்டது.நாத்து வளர்ந்திருந்த விதம் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது.இன்னும் இருபது நாளில் நாத்துக்கள் புடுங்கி நடவேண்டும்.

குமார் நடுவைக்கு ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தான்.ஒரு வாரம் முழுவதும் நடுவை பணி நடந்தது.மருது வயலுக்கு கலையரசியை அழைத்து வந்து காட்டினான்.அவர்கள் வாழ்க்கையில் சரியான நேர்க்கோட்டில்
பயணிப்பது போன்று உணர்ந்தார்கள்.கண்கலங்கியே விட்டாள் கலையரசி.அவளை மார்போடு அணைத்துக்கொண்டான் மருது .

பத்து நாட்களில் நாத்து நன்றாக வளர்ந்திருந்தது.இன்னும் பதினைந்து நாட்களில் நாத்து பால்விட ஆரம்பித்துவிடும்.மருதுவிற்கு கவலை தொடங்க ஆரம்பித்தது.கிணற்றில் இருக்கும் தண்ணீர் இன்னும் ஏழு நாட்களுக்கே வரும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான்.மழைக்காக ஏங்க ஆரம்பித்தான் மருது.

மாயாண்டி வெள்ளாமை செய்துகொண்டிருந்த போதும் இது போன்ற பல சந்தர்ப்பத்தை கடந்து வந்திருக்கிறார்.அவரும் மருதுவைப் போல் வருத்தப்படத்தான் செய்திருப்பார்.ஆனால் அதை எதையுமே மாயாண்டி வெளிக்காட்டியது இல்லை.ஆனால் மருதுவால் அப்படி இருக்க முடியவில்லை.அப்பாவிடம் சென்று அழுதுவிட்டான்.

'கவலப்படாத எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்குள்ள மழை வரும்யா ' மாயாண்டி கூறினார்.அவரின் அனுபவ வார்த்தைகளை நம்பினான் மருது.

கலையரசி தனது வீட்டில் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருந்த மாலை நேரத்தில் மண்வாசனை வருவதை உணர்ந்தாள்.செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு மொட்டை மாடிக்கு ஓடினாள்.மேகம் இருண்டு கொண்டு இருந்தது.கிழக்கிலிருந்து மழை ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது.மகிழ்ச்சியில் இதை தெரிவிக்க மருது வீட்டிற்கு ஓடினாள்.மழை அவளைத் துரத்திக்கொண்டு வந்தது.மருதுவும் இதே உணர்வோடு கலையரசி வீடு நோக்கி ஓடினான்.இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த தருணத்தில் மழை இருவரையும் நனைத்து விட்டு மேற்கு நோக்கிப் பயணித்தது.இரண்டு நாட்கள் ஊரில் நல்ல மழை.

பெய்த மழையால் ஊற்று ஊறி கிணத்திலும் தண்ணீர் வரத்து அதிகமானது.பெய்த மழையின் ஈரப்பதமே அறுவடை வரைக்கும் தாங்கும். நாத்தில் இப்போது கதிர் பிடிக்க ஆரம்பித்தது.வயலின் ஒரு புறத்தில் பரண் அமைத்து காவல் காக்கத் தொடங்கினான் மருது.பகல் இரவு பார்க்காமல் வயலிலேயே கிடந்தான் .இரவில் அவனை மார்கழி குளிர் வாட்டியது.அப்போதெல்லாம் கலையரசியின் நினைவிலேயே மூழ்கிக் கிடந்தான்.அறுப்பு முடிந்தவுடன் குமாரை விட்டுக் கலையரசியின் அப்பாவிடம் பெண் கேட்பது என்று மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டான் .

அவன் கண் எதிரிலேயே கதிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டது.கதிரைப்பார்த்ததும் அவனுக்கு,பட்ட சிரமம் எல்லாம் சாதாரணமாகப் பட்டது.அவன் வானத்தைப் பார்த்து கத்தி கும்மாளமிட்டான்.ஒவ்வொரு கதிராக எடுத்து உற்றுப்பார்த்தான்.மனிதன் முயற்சியும்,நம்பிக்கையும் வைத்தால் எல்லாம் சாத்தியம் தானே !.மனதிற்குள் மகிழ்ந்தான்.இந்த அறுப்பிலிருந்து அவனுக்கு கிடைக்கப் போவது சிறிய வருமானம் மட்டுமே.அதற்குள் அவனால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும்.அதற்கான பக்குவம் அவனிடம் இருந்தது.

வேளண்மை கழகப் பேரசியரும்,குமாரும் வயலை பார்வையிட்டனர்.இன்னும் இரண்டு நாட்களில் கதிர் அறுத்துவிடலாம் என்று பேராசிரியர் அறிவுரை கூறினார்.மருது கண்கலங்கியபடி குமாரை ஆரத்தழுவிக் கொண்டான்.மருது இருவரையும் வழி அனுப்பிவிட்டு வேகமாக கரிசல் காடு நோக்கி ஓடினான்.

மருது தான் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல் பல இளைஞர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தான்.இன்னும் சில காலங்களில் மருதுவின் கிராமம் நாட்டின் முற்போக்குக் கிராமமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.கலையரசியின் அப்பாவால் இப்போது இருவரின் காதலுக்கும் கண்டிப்பாக மறுப்பு தெரிவிக்க முடியாது.குமாருக்கு இப்பொதொல்லாம்

' உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர் '
  எனும் குறளைப் படிக்கும் போது மருதுவை நினைக்காமல் இருக்க முடிவதில்லை.

Thursday, December 24, 2009

அப்பா சைக்கிள்



அய்யனார் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில்  மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை கவனித்துக் கொண்டே வந்தான்.அதில் ஒரு குழந்தைக்கு அதன் அப்பா மிகுந்த ஆர்வத்துடன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.அய்யனார் வீட்டிலும் ஒரு சைக்கிள் இருந்தது.ஆனால் எப்போதுலிருந்து அது தன் வீட்டில் இருக்கிறது என்பது அவனுக்கு நினைவில்லை.அவனுக்கு நினைவு தெரிந்த காலம் முதலே அது அவர்கள் வீட்டில் இருந்தது. அவன் சிறுவயதில் யாறேனும்  ' உங்க வீட்டில யாரு எல்லா  இருக்கிங்க ? என்று கேட்டால் அவன் பதில் 'அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,சைக்கிள்  ' என்பதாகத்தான் இருக்கும்.சைக்கிளையும் ஒரு குடும்ப உருப்பினராகவே கருதிவந்தான்.

பள்ளி செல்லாத வயதில் எப்போதும் சைக்கிளுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சைக்கிளின் சக்கரத்தை வேகமாக சுற்றி டைனமோவை இயக்கிவிட்டு விளக்கு எரிவதை பார்ப்பதே அந்நாளில் அவனுக்கு பிடித்த விளையாட்டு. அந்த சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது.

முன் கம்பியிலும்,சீட்டிலும் அழகாக தைக்கப்பட்டு அணிவிக்கப்பட்ட கவர். அதில் ' தி யுனைட் சைக்கிள் மார்ட் ' என்ற விளம்பரம். இரண்டு சக்கரங்களுக்கு நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த நார் போன்ற சுலலும் தன்மையுடைய சிறிய சக்கரம். சைக்கிளின் முன்புறம் கூம்பு வடிவ டைனமோ லைட். அதை பாதுகாக்க மஞ்சள் நிற பஞ்சு துணி. சைக்கிளின் பின்புறம் வட்ட வடிவ டேன்சர் லைட். மட்காடில் அண்ணன் ஒட்டி வைத்த கபில்தேவ் படம். இரண்டு பெடல்களுக்கும் சிவப்பு நிற உறை. பச்சை நிற ஷ்டாண்ட் என பார்பதர்கே சைக்கிள் அழகாக‌ இருக்கும்.

சைக்கிளை நிறுத்துவதற்க் கென்றே அய்யனாரின் அப்பா வீட்டின் முற்றத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்திருந்தார். அப்பா வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் சைக்கிள் முற்றத்திலேயே நிற்கும். அந்நாட்களில் சைக்கிளின் பிரதான பயன்படுத்தி அப்பா மட்டுமே. அலுவலுக்குச் செல்லும் பொதும், கடைத் தெருவுக்கு செல்லும் பொதும் அதை அன்றாடம் பயன்படுத்தி வந்தார்.வீட்டிலிருந்து முக்கிய வீதியை அடைய‌ வேண்டுமென்றால் ஒரு பெரிய ஏற்றத்தை கடக்க வேண்டும். அய்யானாரின் அப்பா அந்த ஏற்றத்தை கடக்கும் போது எப்போதும் சைக்கிளிள் இருந்த்து கீழே இறங்கி உருட்டிக் கொண்டுதான் செல்வார்.கேட்டால் ஏற்றத்தில் சைக்கிள் மிதிப்பது கடினம் என்பார்.அய்யானார் வெளியூரில் இருக்கும் காலங்களில் அப்பாவை நினைத்து கொள்ளும் போது அப்பா அந்த சைக்கிளுடனே காட்சி அளிப்பார்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத காலங்களில் அதன் மீது ஏறி சைக்கிள் ஓட்டுவது போல் பாவனை செய்து கொள்வான் அய்யானார். குழந்தையாக இருந்த போது அவனுக்கு அம்மா நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சைகிளில் வைத்தே சோறு ஊட்டுவாள்.அம்மாவிற்கு அவன் அழுகையை நிறுத்துவதில் எப்போதும் சிரமம் இருந்தது இல்லை. சைக்கிளின் மணியை அழுத்தினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவான்.

சைக்கிள் ஓட்டுவது அய்யனாருக்கு கனவாகவே இருந்தது. சைக்கிள் கற்றுக் கொடுக்கும்படி அய்யனாரின் அண்ணனிடம் கூறி அதற்க்கான வாய்ப்பை அப்பா அளித்தார். அண்ணன் என்றதும் அய்யானார் சற்று யோசித்திருக்க வேண்டும். பாவம் சிறுவன் . அவனுக்கு அப்போது அது தொன்றவில்லை. நம்பிக்கை வைத்து அண்ணனுடன் சென்றான். முதலில் அன்புடனே கற்றுத்தற ஆரம்பித்தவன் நேரம் செல்ல செல்ல வெறுப்படைய ஆரம்பித்தான். என்ன செய்வது அய்யனாருக்கோ நேரே பார்த்து ஓட்டமுடியாமல் கண்கள் எப்போதும் பெடலுக்கே சென்றது. அப்படி செல்வதால் கைகல் ஆட ஆரப்பித்து வலைந்து நெளிந்து எல்லா முயற்சியிலும் கீழே விழுந்தான். அந்த வயதில் அய்யானாருக்கு மீசை இல்லாததால் மண் ஏதும் ஒட்டவில்லை. இபோது மீசை இருக்கிறது ஓட்டினாலும் பரவா இல்லையாம் . கேட்டாள்  ' என் மண்  ' என பிதட்றுவான்.

கோபத்தின் உச்சியை தொடுவது என்பது அய்யனாரின் அண்ணனுக்கு ஒன்ரும் அறிய விசயமில்லை. கோபம் அதை ஏற்றுக் கொள்பவனையே அழித்துவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அன்று அய்யானாருக்கு நடந்தது அதற்க்கு முற்றிலும் எதிர்பதம். கோபத்தின் உச்சத்தில் அண்ணன் அய்யனாரை சைக்கிளொடு வைத்து தள்ளிவிட்டான். சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்கள் தரையில் எட்டாத நிலையில் நிலைத‌டுமாறி கீழே விழுந்தான். கனுக்காலிள் சிறிய கல் ஒன்ரு குத்தி குருதி வடிய ஆரம்பித்தது. இன்றும் அந்த வடு அதன் மாறாத நினைவுகளோடு அய்யானாரிடம் இருக்கிறது.

அண்ணன் எதைப் பற்றியும் கவலை படாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அய்யானாருக்கோ பெருத்த அவமானமாக‌ ஆகிவிட்டது. காரணம் அவன் விழுவதை அவனுக்கு எல்லா விசயத்திலும் போட்டியாக அவன் குடுப்பத்தாரால் உருவாக்கப்பட்ட எதிர் வீட்டு பையன் பார்த்து விட்டான் என்பதே.

அன்று முதல் சைக்கிள் ஓட்டுவது என்றாலே அவனுக்கு பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. அம்மாவின் வேண்டுதலுக்கு இனங்கி அப்பாவே அவனுக்கு சைக்கிள் கற்றுத்தந்தார். இப்போது முழுமையாக சைக்கிள் ஓட்ட வராவிட்டாலும் அவன் வீட்டு தெருமுனை வரை கீழே விழாமல் அவனால் சவாரி செய்ய முடிந்தது. அதுமட்டுமல்ல அம்மா அவனை அதற்கு மேல் அனுமதிப்பதில்லை. பள்ளியில் அய்யானர்தான் முதல் மாணவன்.ஆச்சர்யப்பட வேண்டாம்.பள்ளி முடியும் மணி அடித்தவுடன் வகுப்பில் இருந்து முதலில் வெளியேறும் மாணவர்களில் அவன் தான் முதல். அதற்கும் காரணம் இருந்தது. மாலை நேரங்களில் அண்ணன் தொந்தரவு எதுவும் இன்றி சைக்கிள் ஓட்டலாம். இந்த வாய்ப்பை அய்யனார் சரியாக பயன் படுத்தி சில நேர்த்திகளை கற்றுக் கொண்டான்.

அவனுக்கு சவாலக ஒரு  நிகல்வு நடந்தது. அய்யானாரின் அம்மாவிற்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஊரின் பெரிய வெற்றிலைக் கடையில் வாங்கியதென்றால் விரும்பி சுவைப்பாள்.  அந்த கடையோ வீட்டிலிருந்து தூரத்தில் இருந்தது. நடந்து செல்வதென்றால் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தும். அம்மா சந்தைக்கு செல்லும் போது நாண்கு தினங்களுக்கு தேவையான வெற்றிலைகளை வாங்கி வைத்துக் கொள்வாள். அம்மாவும் அய்யானாரும் மட்டும் வீட்டிலிருந்த தருனத்தில் வெற்றிலை பெட்டியில் வெற்றிலை தீர்ந்து விட்டது. அம்மாவிற்கு வெற்றிலை போட்டே ஆக வேண்டும். வீட்டு வேலைகள் சரியாக இருந்ததால் அவனிடம் வாங்கிவரும்படி காசை கையில் தினித்தாள். அய்யானார் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடந்து செல்வதென்றால் முடியாது என்றும். சைக்கிள் கொடுத்தால் வாங்கி வருவதாகவும் அடம் பிடித்தான். அம்மாவும் நீண்ட யோசனைக்கு பிறகு அனுமதித்தாள். போகும் போது சாலையை இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் போன்ற சில ஆலோசனைகள் கூறி அனுப்பினாள்.

அய்யனாரும் வெற்றிகரமாக தெருமுனையா கடந்து  இரண்டு பெரிய கடைத் தெருவையும் தாண்டி அம்மாவிற்கு வெற்றிலை வாங்கிதந்து விட்டான். அன்று முதல் அவனுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவனின் சைக்கிள் ஓட்டும் திறனில் புதிய நம்பிக்கை பிறந்தது. அம்மாவின் வெற்றிலை பழக்கம் அய்யானாருக்கு பிடிக்கவில்லை.உடலுக்கு நல்லதல்ல என பல முறை கூறியிருக்கிறான். அவளின் அந்த பழக்கத்திற்காகவுகும் கடை தூரத்தில் இருந்ததற்க்காகவும் இப்போது மனதிற்குள் நன்றி தெரிவித்திக்கொண்டான். அப்பொது முதல் அய்யானாரின் சைக்கிள் சாவாரியின்  எல்லைகள் விரிய ஆரம்பித்தது.ஊரின் சந்து பொந்து அனைத்திலும் ஊர் சுற்றி வந்தான்.

அய்யனாருக்கு சைக்கிள் ஓட்டுவது இப்போது துச்சமாக மாறிவிட்டது. சைக்கிள் அவன் சொல்வதை எல்லாம் கேட்ட‌து. அவன் நிறுத்தினால் சரியான இடத்தில் நின்றது.கையை விட்டு ஓட்டினால் சரியான நேர்கோட்டில் ஓடியது.நண்பர்களை வைத்துக் கொண்டு டபுல்ஷ்,த்ரிபுல்ஷ் அடிப்பது எல்லாம் இப்போது அவனுக்கு அத்துப்படி.ஆனால் அப்போதிலிருந்து அதுவரை அவன் அண்ணன் பார்த்துக்கொண்டிருந்த வேலைகள் எல்லாம் இவன் தலையில் கட்டப்பட்டது.அப்படி என்ன வேலை என்று யோசிக்க வேண்டாம்.ரேஷன் கடைக்கு மண்எண்னைய் வாங்கச் செல்வது.ரைஷ் மில்லிர்க்கு மிளகாய் பொடி அரைக்க செல்வது அம்மாவை சந்தைக்கு கூட்டிச் செல்வது என பல வேலைகள்.அப்போதுதான் உணர்ந்தான் சைக்கிள் ஓட்டுவது சிரமம் அதுவும் எதிர்காற்றில் ஓட்டுவதென்றால் கேட்கவே வேண்டாம் என்று.அப்பாவின் சிரமமும் அவனுக்கு புரிந்தது.

அய்யனார் மேல்நிலை பள்ளியில் படித்தபோது பள்ளிக்கு செல்கையில் சைக்கிள் செயின் கலண்டு விட்டது.உட்கார்ந்து சரி செய்து கொண்டிருக்கும் போது அவன் சக‌ வகுப்பு தோழிகள் அவனை பார்த்த படியே கடந்து சென்றனர். அன்று பள்ளியை அடைய சற்று தாமதமாகிவிட்டது. ஆசிரியர் அய்யனாரை வகுப்புக்கு வெளியே அரைமணி நேரம் காக்க வைத்து விட்டார். வகுப்பு தோழிகள் சிலர் தங்களுக்குள் ஏதோ பேசி இவனை பார்த்து சிரித்தனர். இந்த நிலைக்காக சைக்கிளின் மீது கோபப்பட்டான் அய்யானார்.

நண்பர்களுடன் பக்கத்து கிராமத்திற்க்கு சைக்கிளில் சென்று பனங் கல் அருந்திவிட்டு உளரியதை இன்று வரை யாரிடமும் காட்டிக் கொடுத்து விடவில்லை சைக்கிள். கல்லூரி காலங்களில் அய்யானர் வருத்தமாக இருக்கும் போது சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகுதூரம் பயணம் செய்வான். கல்லூரி படிப்பவனுக்கு கவலை என்ன இருக்கு எதாவது காதல் கத்திரிக்காயாக இருக்கும் என்று நிங்கள் நினைத்தால் அது தவறு. அவனுக்கு இருந்த கவலையே வேறு.மொத்தமாக இரண்டு வருட தேர்வுகளிளும் தேர்ச்சி அடையாமல் இருந்தான். மூண்றாம் ஆண்டிலாவது அனைத்திலும் தேர்ச்சி அடைய வேண்டிதான் அந்த பயணம். தேர்வுக்காக கொடுக்கப்பட்ட விடுமுறையில் மனித நாடமாட்டமே இல்லாத இடத்திற்கு சைக்கிள் சென்று படித்துகொண்டிருப்பான்.அது அவனுக்கு முமுமையாக உதவியது.

சைக்கிள் அய்யனார் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளையும்,சில கோபங்களையும்,சில அவமானங்களையும்,சில உற்ச்சாகங்களையும் மாறி மாறி தந்து கொண்டிருந்தது.

பட்ட மேற்படிப்புக்காக விடுதியில் தங்கியிருந்த போது அம்மா தொலை பேசியில் அய்யானாரை அழைத்து அப்பா புதிய TVS-50 வாங்கிய விசையத்தை தெரிவித்தாள். அய்யானாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வார விடுமுறை
க்கு சென்று ஓட்டிவிட வேண்டுயதுதான் என்று மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டான்.

விடுமுறை தினத்தில் வீடு வந்த போது அந்த புதிய TVS-50 எலும்பிச்சை பழம்,சந்தனம் குங்குமம் சகிதம் அழகாக வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தது. அப்பாவிடம் சாவி வாங்கி ஊரையே ஒரு சுற்று சுற்றி வந்தான். தன் நண்பர்களிடம் அதை காட்டி பெருமை பட்டுக்கொண்டான். இரண்டு தினங்களும் தன்னை மறந்து திரிந்தான். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு உறங்கச் சொல்லும் முன் மொட்டை மாடியில் உலாத்திவிட்டு வீட்டிற்க்குள் நுழையும் போதுதான் அதை க‌வணித்தான். முற்றத்தில் TVS-50 மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. சைக்கிளை காணவில்லை.அம்மாவிடம் கேட்ட போது ' அப்பாதா சைக்கிள அந்த TVS-50 காடையிலேயே கொடுத்துட்டு இந்த TVS-50 ஐ வாங்கிட்டு  வந்தாரு , அந்த சைக்குளுக்கு வெறு ஆயிரம் ரூபாதா கழிச்சுக்கிட்டானா ' என்று கூறி சலித்துக்கொண்டாள்.

அப்பாவிடம் கேட்டபோது ' எனக்கும் வ‌யசாயிருச்சு அத மிதக்க வேற முடியல‌ , நிங்களு வேலை படிப்பு அப்படி இப்படினு வெளியூருல இருக்கிங்க எதுக்கு தேவ இல்லாம அது வேற இடத்தை அடச்சுக்கிட்டு அதுதா வந்த விலைக்கி தள்ளி விட்டுட்டே.அதுதா  TVS-50 இருக்குல அது போது ' என்று சாப்பிட்ட கையை கலுவிக் கொண்டெ கொள்ளை புறத்திலிருந்து முனங்கினார்.

அய்யானாரால் நம்ப முடியவில்லை.அப்பாவால் எப்படி அதை செய்யமுடிந்தது,தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அந்த சைக்கிளுடனே கழித்துவிட்ட அப்பா இப்போது எப்படி இந்த முடிவிற்க்கு வந்தார்.
தனக்கிறுந்த அனுபவம் போல அப்பாவிற்காகவும் சைக்கிள் பல எண்ணற்ற அனுபவங்களை தந்திருக்கும்.

மொட்டை மாடி கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி வானத்தை வெரித்து பார்ததுக்கொண்டு  நின்றான் அய்யானார்.

அப்பா இப்போது அவர்கள் வீட்டுத் தெருவின் ஏற்றத்தை நொடியில் கடந்து வீடுகிறார்.அம்மாவாள் அடிக்கடி அப்பாவுடன் கோவிலுக்கும் சந்தைக்கும் சிரமம் இன்றி செல்ல முடிகிறது.அக்காவிற்க்கும் TVS-50 ஓட்டி கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு.அண்ணனும் அய்யானரும் எதிர்காற்றை பற்றி கவலை படாமல் ஊர் சுற்றலாம். TVS-50 அய்யானாரின் குடுப்பத்தில் ஒரு அங்கமாக முயன்று கொண்டிருந்தது.எல்லாம் இருந்தும் என்ன‌ அந்த சைக்கிளின் இடத்தை வேறு எந்த விசயத்தாலும் நிறப்ப முடியவில்லை.

யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம் செல்லுங்கள்.அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது !.

Wednesday, December 2, 2009

பொய்மை

எப்படி எல்லாமோ
மறைத்த ரகசியம்
முதுகுக்கு பின்னால்
எட்டிபார்த்த ஒருவனால்
அம்பலமானது நடு வீதியில்

யாரேனும் ஆணையிடுங்கள்
விண்ணப்பங்களில்
வயது என்ற கட்டத்தை
அழிக்கச் சொல்லி.

Tuesday, December 1, 2009

நம்பிக்கை

வறுமையுடன் தாய் ஊரில்
ஆசையுடன் தமையன் விடுதியில்
கனவுகளுடன்  தமக்கை  புகுந்த வீட்டில்
குழ‌ப்பத்துடன் நண்பன் அருகில்
ஆவலுடன் வங்கியாளன் தொலைபேசியில்
அனைவரும் காத்திருக்கிறார்கள்
எனக்காக
நான் காத்திருப்பதோ
இவைகள் அனைத்துடனும்
இருபது தேதிக்கு பிறகு
பிரதி மாதம்
முதல் தேதிக்காக.

Wednesday, November 25, 2009

உதவாக்கரை



காதருந்த ஊசி
கால் முறிந்த‌ நாற்காலி

சிறகொடிந்த பறவை
திரிந்த பால்
ஏட்டுச் சுரக்காய்
உப்பில்லா பண்டம்
 

நான்.